அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான ‘நாசா’ வழங்கும் ‘ஸ்கேன்’ (NASA SCaN) உபகாரச் சம்பளத்தைப் பெற்ற முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையை 2021இல் பெற்ற இளம் பொறியாளர் சினேகா மணிமுருகன், 27, தற்போது தன் துறையில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளார்.
நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டக் கல்வியை இவ்வாண்டு தொடங்கியுள்ளார் இவர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகத்திலும் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.
முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட (3D Printed) கட்டமைப்புகளையும் உயர்தர விண்வெளி மூலப்பொருள்களையும் விண்வெளியில் சோதிக்க ‘ஏ ஸ்டார்’, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் இணைந்து உருவாக்கிய ‘வெலோக்ஸ்-ஏஎம்’ செயற்கைக்கோளின் இயந்திரவியல் சோதனை மற்றும் உருவாக்கத்தில் இவர் பங்காற்றியுள்ளார். மேல்விவரங்களுக்கு: (https://www.ntu.edu.sg/sarc/research-capabilities/satellites/velox-am)
முதன்முறையாக பூமியின் அதி தாழ் வட்டப்பாதைக்கு (Very Low Earth Orbit) சிங்கப்பூர் அனுப்பவிருக்கும் செயற்கைக்கோளைக் கட்டுப்படுத்த உதவும் Attitude Determination and Control Subsystem எனப்படும் ‘ஏடிசிஎஸ்’ கட்டமைப்புக்கான கணக்குகள், மாதிரிப்படுத்துதலில் இவர் பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் அணிவகுத்துப் பறக்கும் செயற்கைக்கோள்களின் ‘ஏடிசிஎஸ்’ மென்பொருளிலும் இவரது கைவண்ணம் இடம்பெற்றுள்ளது.
புகழ்பெற்ற விண்வெளிப் பொறியாளராக வேண்டும் என்ற நீண்டநாள் கனவை நனவாக்கும் பாதையில் இது இவருக்குக் கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாகும்.
விண்வெளித் துறையில், சினேகாவின் முதல் முன்மாதிரி, இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் ஆவார். தொடக்கப் பள்ளியில் இந்தியப் பாரம்பரிய நடனம்வழி அவரைச் சந்திக்க சினேகாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் ஆய்வு செய்த அனுபவங்களைப் பகிர்ந்த டாக்டர் கலாமின் நூல்கள், சினேகாவின் விண்வெளிக் கனவுகளுக்கு வித்திட்டன.
“தூங்கும்போது காண்பது கனவன்று; தூங்கவிடாமல் செய்வதே கனவாகும்,” என்ற டாக்டர் கலாமின் கூற்றுக்கேற்ப, விண்வெளித் துறையில் பெரிய சாதனைகளை நிகழ்த்தவும் விண்வெளி ஆய்வுத் தொழில்நுட்பங்களை மேம்[Ϟ]படுத்தவும் இவர் விரும்புகிறார்.
முதல் முயற்சியாக, தன் இளநிலைப் பட்டப்படிப்பின் ஆய்வில், விண்மீன்களைத் தானியங்கியாகப் பார்வையிட உதவும் 16 அங்குல நியூடோனியன் தொலைநோக்கிக்கான தாங்கியை சினேகா வடிவமைத்தார்.
இளநிலைப் பட்டம் பெற்றபின் பிரான்ஸ் நாட்டிலுள்ள ‘ஐஎஸ்ஏஈ-சுப்ஏரோ’ பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட சினேகா, அனைத்துலக விண்வெளி நிலையத்தை மேற்பார்வையிடப் பயன்படும் ‘நானோ ட்ரோன்’ ஒன்றுக்கான மென்பொருளில் பணியாற்றினார்.
சினேகா, ‘ஸ்பேஸ் ஜெனரேஷன் காங்கிரஸ்’, ‘ஐஏசி’ எனப்படும் அனைத்துலக விண்வெளி மாநாடு என துபாயில் நடந்த இரு மாநாடுகளிலும் சிங்கப்பூரைப் பிரதிநிதித்தார். நிலவிற்குத் திரும்புவதற்கு வேண்டிய தொழில்நுட்பத் தீர்வுகளை ‘நாசா’, ‘எஸ்ஜிஏசி’, ஐக்கிய நாடுகளின் விண்வெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவது தொடர்பான குழுக்களுக்கும் (UN COPUOS) பரிந்துரைத்தார்.
2022ஆம் ஆண்டின் ‘ஐஏசி’ மாநாட்டில், ‘மேரிலேண்ட்’ பல்கலைக்கழகத்தில் ‘நாசா ஹார்வஸ்ட்’ திட்டத்திற்குத் தலைமைதாங்கும் பேராசிரியர்களுடன் இணைந்து ஓர் ஆய்வுக் கட்டுரையையும் வெளியிட்டார். இம்முயற்சி, ‘க்ரேவிட்டி’ சவால் போட்டியாக 2021ல் தொடங்கியது. அப்போட்டியில் அனைத்துலக அணியினரை வெற்றியை நோக்கி வழிநடத்தினார் சினேகா.
“சிங்கப்பூரில் விண்வெளி நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. நம் நாடு பல விண்சார்ந்த தொழில்முனைவுகளுக்கு மையமாகவும் உருவாகிவருகிறது.
“அதனால் இத்துறையில் பங்குபெற விரும்பினால் பல்கலைக்கழகம் அல்லது பள்ளியில் படிக்கும்போதே தொடங்கலாம்,” என்கிறார் சினேகா.
மேலும் பல சிங்கப்பூர் இளையர்கள், விரும்பிய துறைகளில் தங்கள் கனவுகளைப் பூர்த்தி செய்ய உழைக்க வேண்டும் என்று இவர் வலியுறுத்துகிறார்.