- சபிதா ஜெயகுமார்
புத்தாண்டை வரவேற்க அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வோர் ஆண்டும் நாம் வாழ்ந்து வரும் உலகம் மிக வேகமாய் மாறிக்கொண்டு வருகிறது. உலக அளவில் மக்களிடையே வளர்ந்து வரும் கருத்து வேறுபாடுகளும் பூசல்களும் பலமுறை மனிதர்களைச் சண்டையிடத் தூண்டியுள்ளது.
தனிமனிதர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து செயல்படும் வேளையில், மனிதத் தன்மையை இழந்து பிறருக்கு ஆற்றமுடியாத அளவிற்கு காயத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் பல 2023ல் நிகழ்ந்ததை நம்மால் நினைவுகூர முடியும். எனினும், ஆண்டு புத்தம் புதிதாய் தொடங்கவிருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் நம் சமூகத்திற்கும் சகமனிதர்களுக்கும் நம் பங்கை ஆற்றலாம். புதிய இலக்குகளை வரையறுத்து, முன்னேற்றப் பாதையில் செல்ல புத்தாண்டுத் தீர்மானங்கள் எடுப்பது வழக்கம்.
இவ்வாண்டு மனத்தை உலுக்கிய சம்பவங்களை மறவாது, புதிய ஆண்டில் தயக்கமின்றி, முன்சென்று உதவிக்கரம் நீட்டி, பிறருக்கு மனிதத்தின் ஆற்றலை நினைவுபடுத்தும் வகையில் என்னால் முடிந்த முயற்சிகளில் ஈடுபட நோக்கம் கொண்டுள்ளேன்.
பல்வேறு பின்னணிகளில் இருந்து வரும் மனிதர்கள் உலகைப் பற்றி வெவ்வேறு பார்வைகள் கொண்டிருப்பர் என்பதையும் அவற்றை அறிந்துகொள்வது ஒரு நல்ல கற்றல் அனுபவம் என்பதையும் நினைவில்கொண்டு புதிய ஆண்டை வரவேற்போம். இப்புத்தாண்டு அனைவருக்கும் மேலும் நலமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் அமையும் என்று நம்புகிறேன்.
சபிதா ஜெயகுமார்
நன்யாங் பல்கலைக்கழக மாணவி