தாம் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தெலுங்கு இளம் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்றும் இளம் நாயகி மிருணாள் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ஊடகங்களில் வெளியான தகவல்களைப் பார்த்த தனது நண்பர்களும் உறவினர்களும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மிருணாள் நாயகியாக நடித்துள்ளது தெலுங்குப் படம் ‘சீதா ராமம்’. இதில் சிறப்பாக நடித்ததை அடுத்து மிருணாளுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் மிருணாள் தாக்கூருக்கு விருது வழங்கிய நடிகர் அல்லு அரவிந்த், “விரைவில் தெலுங்கு மணமகனைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு, ஹைதராபாத்தில் குடியேறுங்கள்,” என்று வாழ்த்தினார்.
இதையடுத்து தெலுங்கு நடிகர் ஒருவரை மிருணாள் காதலிப்பதாகத் தகவல் பரவியது.
“அல்லு அரவிந்த் நகைச்சுவைக்காக அவ்வாறு பேசினார். அது இவ்வளவு பெரிய வதந்தியாக மாறும் என்று நினைக்கவில்லை,” என்கிறார் மிருணாள்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார்.