[ο] ரஜினிக்கான கதையில் நடிக்கும் சிம்பு
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயார் செய்து வைத்திருந்த கதையில் விஜய் நடிக்க மறுத்ததால் தற்போது அதே கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதேபோல், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்கு ஒரு கதை சொன்னார். ஆனால், அந்தக் கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டதால் இப்போது சிம்பு நடிப்பதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார். குறிப்பாக, ரஜினிக்கு உருவான கதை என்பதால், அதில் சிறு மாற்றம் கூட செய்யாமல் அப்படியே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிம்பு.
[ο] திரைப்படமாகும் திருக்குறள்
காமராஜரின் வாழ்க்கையை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து, இயக்கிய ஏ.ஜே.பாலகிருஷ்ணன், தற்போது திருக்குறளையும் சினிமாவாகத் தயாரித்து, இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
“தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறோம். திருவள்ளுவரோடு இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய தமிழ் நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம்.
“மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும் தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களக்காட்சிகளும் அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் உள்ளிட்ட வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது. அதோடு சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம்பெற உள்ளனர். இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்கென தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்,” என இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
[ο] எட்டுப் படங்களில் நடிக்கும் அம்மு அபிராமி
‘பைரவா’ படத்தில் விடலைப் பெண்ணாக அறிமுகமான அம்மு அபிராமி, இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இப்போது ‘கண்ணகி’, ‘நிறங்கள் மூன்று’, ‘யார் இவர்கள்’, ‘கனவு மெய்ப்பட’ ‘பெண்டுலம்’ உள்ளிட்ட ஏழு படங்களில் நடித்து வருகிறார். ‘கோலி சோடா 1.5’ என்ற வெப் தொடரிலும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள ‘ஜிகிரி தோஸ்த்’ படம் டிசம்பரில் வெளியாகிறது. இதில் ஷாரிக் ஹாசன் ஜோடியாக அவர் நடித்துள்ளார்.
[ο] பிறந்தநாளில் 4 கோடி காரை பரிசளித்த விக்னேஷ்
ஒருபுறம் நடிப்பு, மற்றொரு புறம் தயாரிப்பு என திரையுலகில் கணவருடன் கைகோத்து கலக்கிக்கொண்டிருக்கும் நயன், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவின் 39வது பிறந்தநாள் நவம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கணவர் விக்னேஷ் சிவன் அவருக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். விக்கி அளித்த இனிப்பான அன்பளிப்பு இதுதான் என்று ‘மெர்சிடிஸ் மேபேக்’ எனப்படும் சொகுசு காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை நயன்தாரா இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களில் ஒன்றான இதன் மதிப்பு 2.69 கோடி முதல் 3.40 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
[ο] நடிகையாவேன் என நினைக்கவில்லை: ராஷ்மிகா
ரன்பீர் கபூர்-ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘அனிமல்’ படம் இன்று 1ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ‘பான் இந்தியா’ படமாக வெளியாகிறது.
இதனை முன்னிட்டு அண்மையில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா, “பெரிய நடிகர்களின் படங்களில் நானும் ஒருத்தியாக இருப்பதில் எவ்வித ரகசியமும் இல்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்தப் படத்தின் கதையைக் கேட்பேன். இயக்குநரை நம்புவேன், அதற்குமேல் என் கையில் எதுவுமில்லை. நான் நடிகை ஆவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
“தற்போது மிகப்பெரிய நடிகர்களுடன் மேடையில் அமர்ந்துள்ளேன். இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளுக்கும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்,” என்று பேசியுள்ளார்.