‘சலார்’ திரைப்படம் உணர்வுபூர்வமான படமாக இருக்கும் என்று பிரபாஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் ‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படமும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. அப்படி பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த அவரின் ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ படங்கள் வெற்றியைப் பெறவில்லை.
தொடர்ந்து, ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படமும் ஏமாற்றத்தை கொடுத்ததால், ‘சலார்’ படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல கோடி ரூபாய் வியாபாரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
‘கே.ஜி.எப்.’ படத்தைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ரூ.400 கோடி செலவில் இப்படத்தை உருவாக்கி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ளது.
இப்படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் குறித்து பேட்டி அளித்துள்ள பிரபாஷ், “சலார்’ திரைப்படம் கதாபாத்திரங்களுக்கு இடையே உணர்வுபூர்வமான போராட்டத்தைச் சொல்லும் படமாக உருவாகி உள்ளது. மேலும் முதல்முறையாக ரசிகர்கள் படத்தில் என்னை ஒரு கதாபாத்திரமாக பார்ப்பார்கள். நானும் பிரசாந்த் நீலும் சேர்ந்தே படத்திற்கான வேலைகளைச் செய்தோம்.
“நான் அந்தக் கதாபாத்திரத்தை அணுகும்விதம் குறித்து, நாங்கள் ஓய்வெடுக்கும்போதும், வேடிக்கையாக பேசும்போதும் விவாதிப்போம். சினிமாவிற்கு வந்த 21 ஆண்டுகளில், நான் பணிபுரிந்ததிலேயே பிரசாந்த் நீல்தான் சிறந்த இயக்குநர்.
“படப்பிடிப்பு தளத்திற்கு ஷ்ருதிஹாசன் மற்றும் பிருத்வி போன்றவர்கள் வந்தவுடன் படப்பிடிப்பு அசுர வேகத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் நடக்கும்.
“நாங்கள் இருக்கும்போது எங்கள் காட்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். பிரசாந்த் நீல் என்னுடைய கதாபாத்திரம் உடற்கட்டோடு இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே சொன்னார். அதற்கேற்ப நான் என்னை மாற்றிக்கொண்டேன்,” என்றார்.
இதற்கிடையில் படக்குழுவினர் படத்தின் முதல் டிக்கெட்டை வெளியிடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அதில் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா 70எம்எம் திரையரங்கில் திரையிட உள்ள முதல் நாள் முதல் காட்சிக்கான முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமவுலி, படக்குழுவிடமிருந்து பெற்றுக் கொண்டார். அதைக் காணொளியாக படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.