‘விடுதலை’ படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை 2’ படத்தின் தாமதத்திற்கு பனிப்பொழிவுதான் காரணம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற படம் ‘விடுதலை’. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான ‘விடுதலை 1’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ‘விடுதலை 2’ தாமதமாக என்ன காரணம் என்று இயக்குநர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பனிப் பொழிவில் இறுதிக் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், நான்கு ஆண்டுகள் ஆனாலும் முடியாது என்று பிறகுதான் புரிந்தது. அதன் காரணமாக செயற்கை பனிப்பொழிவை உருவாக்கி படமாக்கினோம். அதனால்தான் ‘விடுதலை 2’ முடிக்க காலதாமதம் ஆனது,” என்று தெரிவித்தார்.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ரஜினி உள்பட திரை பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.