‘கா’ படத்தில் புகைப்படக் கலைஞராக ஆண்ட்ரியாதான் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் நாஞ்சில் வற்புறுத்தியதால்தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
‘கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேசியபோது, “படத்தின் இயக்குநர் நாஞ்சிலுக்கு எனது பாராட்டுகள். உயிரை கொடுத்து எடுத்திருக்கிறார்.
“இத்திரைப்படம் குழந்தை மாதிரி. தயாரிப்பாளர் என்ற அப்பாவும் இயக்குநர் என்ற அம்மாவும் ஒத்துழைக்காமல் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை வளர்த்திருக்க முடியாது.
“சில இயக்குநர்கள் தங்கள் படங்களுக்கு சில நடிகைகளை முதலில் தேர்வு செய்வார்கள். பிறகு அந்த நடிகை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அந்த நடிகைக்கு பதிலாக இன்னொரு நடிகையை நடிக்க வைத்துவிடுவார்கள்.
“ஆனால் நாஞ்சில் அப்படி அல்ல. இந்தப் படத்துக்கு நான்தான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்தார்.
“அதற்கு அவருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு காடு என்றால் பிடிக்கும். என்னைப் பொறுத்தவரை கோயிலைவிட காடுதான் கடவுள், இயற்கைதான் கடவுள். அந்த வகையில் இப்படம் எனக்கு முக்கியமான படம்,” என்று அவர் பேசினார்.