தனது வாழ்க்கையில் இசைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்றும் அதனால்தான் இசையுடன் இணைந்து பயணம் மேற்கொண்டுள்ளேன் என்றும் கூறுகிறார் ஷ்ருதி ஹாசன்.
‘இனிமேல்’ என்ற தலைப்பில் இவர் உருவாக்கி உள்ள தனியிசைத் தொகுப்பு குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தனியிசைப் பாடல்கள் மூலம் தமக்கு நல்ல பெயர் கிடைத்துள்ள போதிலும் ‘தேவர் மகன்’ படத்தின் மூலமாகத்தான் ஒரு பாடகியாகத் தனது திரைப்பயணம் தொடங்கியதாக அண்மைய ஊடகப் பேட்டி ஒன்றில் ஷ்ருதி குறிப்பிட்டுள்ளார்.
அதில் இடம்பெற்ற ‘போற்றிப் பாடடி பெண்ணே...’ பாடலைப் பாடியபோது ஷ்ருதிக்கு ஐந்து வயதாம்.
“அந்த வயதில் இளையராஜா என்றால் யார், சிவாஜி தாத்தா எப்படிப்பட்டவர் என்று எதுவுமே தெரியாது. பாடல் பதிவு என்றால் புரியாது. ஆனால் அன்று அப்பாவும் அம்மாவும் அந்தப் பாடலைப் பாடும்படி உற் சாகமூட்டினர். நானும் ஜாலியாகப் பாடிவிட்டேன். ஆனால் இப்போது அந்த நிகழ்வையும் அதுபோன்ற பல்வேறு தருணங்களையும் நினைத்துப் பார்த்தால், எப்பேர்ப்பட்ட அருமையான அனுபவங்கள் என்று வியப்பும் உற்சாகமும் ஏற்படுகிறது,” என்கிறார் ஷ்ருதி.
ஒருநாள் மும்பையில் உள்ள தனது வீட்டில் பியானோ வாசித்துக்கொண்டிருந்த போதுதான் இந்த இசைத்தொகுப்பு குறித்து மனதில் யோசனை தோன்றியதாம்.
‘உறவுகள்’ தொடர்பான கருத்துகள் அடங்கிய படைப்பை உருவாக்க தானும் விரும்பியதாகச் சொல்கிறார்.
முதலில் ஆங்கிலத்தில் சில வரிகளை எழுதிய ஷ்ருதி, அதை கனடாவில் உள்ள இசை அமைப்பாளர் யான்ச்சனுக்கு அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த வரிகள் பாடலாக உருப்பெற்றன.
தமிழில் காணொளி வடிவில் தனி இசைத்தொகுப்பாக வெளியிடுவது, கமல்ஹாசனை தயாரிக்கச் செய்வதுடன், அவரையே பாடல்களையும் எழுதச் சொல்வது என்று அடுத்தடுத்து பல விஷயங்கள் முடிவு செய்யப்பட்டனவாம்.
“வாழ்க்கையில் சில தருணங்களில் சில தவறுகளை அல்லது செயல்பாடுகளை இனிமேல் செய்யக்கூடாது என்று எல்லாருமே நினைத்திருப்போம்.
“ஆனால் மீண்டும் அதே தவறைச் செய்வோம். இதுதான் மனித குணம். மனித உறவு களும் அப்படிப்பட்டவைதான். இந்தக் கருத்தைத்தான் இசைத்தொகுப்பில் பதிவு செய்துள்ளோம்.
“அப்பாவிடம் உறவுகளை மையப்படுத்தி ஒரு பாடல் வேண்டும் என்று தெரிவித்தேன். மறுநாளே பத்து வெவ்வேறு அணுகுமுறையில் வரிகளைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்தார்.
“இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதில் நடிகராக அறிமுகமாகி உள்ளார் தொடக்கத்தில் நடிக்க மறுத்துவிட்ட அவரை எப்படியோ சமாதானப்படுத்தி நடிக்க வைத்தோம்.
“படமாக்கிய காட்சி களைப் பார்த்தபோது மிக அருமையாக நடித்திருந்தார். அப்பாவிடம் இதைத் தெரிவித்தபோது, அவரும் மகிழ்ச்சி அடைந்தார்,” என்கிறார் ஷ்ருதி ஹாசன்.
தந்தை கமல்ஹாசன் நடித்த பல படங்கள் பிடிக்கும் என்றாலும் ‘மகாநதி’ படத்தை இன்னும் அதிகமாகப் பிடிக்குமாம்.
‘பேசும்படம்‘, ‘மைக்கேல் மதன காமராஜன்’ ஆகியவையும் இவரது விருப்பப் பட்டியலில் உள்ளன.
“அப்பா நடிப்பில் ஏராளமான காட்சிகள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. எனினும், குறிப்பிட்ட ஒரு காட்சியில் எவ்வாறு நடித்தீர்கள் என்று மட்டும் அவரிடம் கேட்டதே இல்லை.
“கடும் உழைப்பைக் கொடுத்து நடித்த படங்கள் எதிர்பாராத தோல்வியைச் சந்திக்கும்போது அதை எவ்வாறு கையாண்டீர்கள் என்றும் கேட்டதில்லை. ஏனெனில், வெற்றி, தோல்வி என இரண்டையும் அப்பா ஒரே மாதிரியாகத்தான் எதிர்கொள்வார். எல்லா அனுபவங்களுமே நேர்மறை விளைவுகளைத் தரும் என்று நம்பக்கூடியவர். எனவே அவர் கூறும் அனைத்தையுமே நான் நல்ல படிப்பினையாக எடுத்துக்கொள்வேன்,” என்கிறார் ஷ்ருதி.
பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிப்பு என்று பன்முகத் தன்மை கொண்டுள்ள ஷ்ருதி, தற்போது ‘சென்னை ஸ்டோரீஸ்’ என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். இது உலகெங்கும் வெளியீடு காண உள்ளதாகத் தகவல்.
“முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை இது. எனினும் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும். சென்னையில்தான் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.