புவனேஸ்வர்: தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் வேலை செய்யும் 35 இந்தியர்கள், தங்களது நிறுவனத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
தாங்கள் வேலைசெய்யும் நிறுவனம், ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாகவும் ஆயினும் தங்களுக்குச் சம்பளமும் தராமல், ஊர் திரும்ப விடாமலும் தங்களைப் பிடித்து வைத்துள்ளதாகவும் ஒரு காணொளிப்பதிவு வழியாக அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
உணவுக்குக்கூட வழியின்றித் தவிப்பதாகக் கூறிய அவர்கள், தங்களது கடப்பிதழ்களையும் நிறுவனம் பறித்து வைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மாநிலத் தொழிலாளர்துறை ஆணையர் லாவோசிலுள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.