பெங்களூரு: தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடகா உறுதியாக மறுத்துள்ளது.
தமிழகத்திற்கு குறைந்தது வினாடிக்கு, 24,000 கன அடி வீதம், ஆகஸ்ட் மாதம் காவிரியில் தண்ணீர் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க ஆணையிடுமாறு ஆகஸ்ட் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு வரும் செப்டம்பர் 21ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது. தற்போது அணையில் உள்ள நீர் கர்நாடகா மக்களின் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே சிவக்குமார் கூறியுள்ளார்.
பாஜக இதை அரசியலாக்குகிறது. அடிப்படை கூடத் தெரியாமல் கருத்துத் தெரிவிப்பது தவறு. கண்டித்தக்கது என்று அவர் கூறினார்.
தமிழக அரசு மீது சாடல்
இதற்கிடையே, மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தேவையற்ற தொல்லைகளைத் தருவதாக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
திமுகவும் காங்கிரசும் நீண்டகாலமாக கூட்டணியில் இருந்து வந்துள்ளன. அகில இந்திய அளவிலான ‘இண்டியா’ கூட்டணியில் இரு கட்சிகளும் முதன்மை கட்சிகளாக உள்ளன. இருந்தபோதும், காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் தரவில்லை என்று குறிப்பிட்ட திரு சித்தராமையா, இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தேவையில்லாமல் எதிர்ப்பதாகச் சொன்னார்.
“தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் அம்மாநிலத்துக்கு தேவையான 177.25 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்கும். அதில் மாற்றம் இல்லை. மேகதாது அணை என்பது கர்நாடகாவுக்குள் கட்டப்பட இருக்கிறது.
“மேகதாது அணை கட்ட விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் மத்திய பாஜக அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. காவிரி நதிநீர் ஆணையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆகையால், மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் தர காவிரி ஆணையத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுக்க வேண்டும் என்று திரு சித்தராமையா கூறினார்.
கர்நாடகா அரசு கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் “நாங்கள் அரசியலே செய்யமாட்டோம்” என்று பாஜக கூறியதைச் சுட்டிய அவர், ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் போராட்டம் நடத்தி அரசியல் செய்துவிட்டுதான் பாஜகவினர் போயுள்ளதாக விமர்சித்தார்.
“காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதால்தான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டோம். கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவையையும் மாநில அரசு கவனத்தில்கொண்டு செயல்படுகிறது. கர்நாடகா மக்கள் நலனைப் பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. நீர் பிரச்சினையில் குடிநீர் முதன்மையானது,” என்று சித்தராமையா கூறினார்.