விஜயவாடா: ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசாங்கம், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட பிறகு அவரது தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களையும் கடந்த சனிக்கிழமையிலிருந்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது.
சென்ற சனிக்கிழமை அதிகாலை தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையும் எம்எல்ஏக்களையும் காவல்துறையினர் தேடினர். இதில் எம்எல்ஏக்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக் கிழமை சந்திரபாபு நாயுடு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். அப்போதுகூட அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. திங்கட்கிழமை தெலுங்கு தேசக் கட்சியினர் முழு அடைப்பு விடுத்தது வரை அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
இதன் காரணமாக தெலுங்கு தேசக் கட்சியினரின் முழு அடைப்புப் போராட்டம் பிசுபிசுத்தது. கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்திரபாபு நாயுடு 2014-19 ஆட்சிக் காலத்தில் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல் கல்லூரிகள் உட்பட தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ. 3,000 கோடி செலவாகும் என தீர்மானிக்கப்பட்டு, அதில் ஆந்திர அரசு 10 விழுக்காடு நிதி வழங்கியது.
பத்து விழுக்காடும், ஜிஎஸ்டி ரூ. 40 லட்சம் என மொத்தம் ரூ. 371 கோடி நிதியை சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதலின் பேரில் அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு வழங்கியது. இதில் ரூ. 118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கும் தொடர்பு இருப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டில் தற்போதைய ஜெகன் அரசாங்கம் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக சிஐடி காவல்துறை 2021ஆம் ஆண்டே வழக்குப்பதிவு செய்தது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசக் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ஜெகன் அரசு துரிதப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்திரபாபு மகன் நாரா லோகேஷ், “ஆந்திரா முழுவதும் எங்களது கட்சியை அழிக்க ஆளுங்கட்சி முயற்சி செய்கிறது,” என்று சாடியுள்ளார்.
“எங்களது கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இது, சர்வாதிகார நடவடிக்கை. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்,” என்று கூறியுள்ளார்.