ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்கர் மாவட்டம் கோட்வாலி காவல்துறை சரகத்துக்குட்பட்ட ஜெகத்பூர் பகுதியில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளை செயல்படுகிறது.
அதில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி ரொக்கம், தங்க நகைகள் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் ஐந்து பேரை காவல்துறை கைது செய்தது. கொள்ளை அடிக்கப்பட்ட அனைத்தையும் அது மீட்டது. மற்றவர்களைத் தேடிவருவாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் சத்தீஸ்கர், பீகாரைச் சேர்நதவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
“மொத்தம் ஆறு அல்லது ஏழு கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வங்கி உள்ளே வந்தனர்.
“வங்கி ஊழியர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.
“பின்னர் வங்கி மேலாளரை, கத்தி போன்ற ஆயுதத்தால் பயங்கரமாகத் தாக்கி, அவரிடமிருந்த பாதுகாப்புப் பெட்டக அறையின் சாவியைப் பறித்தனர். அங்கிருந்து அவர்கள் உள்ளே சென்று ரொக்கம், தங்கக் கட்டிகள், நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுவிட்டனர்.
“அவற்றின் மதிப்பு ரூ.5.62 கோடி. காயமடைந்த வங்கி மேலாளர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.
“இந்த மாநிலத்தில் இதுபோன்ற கொள்ளை இதுவரை நடந்தது இல்லை.
“கொள்ளை பற்றி தகவல் கிடைத்ததும் முழு காவல்துறையும் செயலில் இறங்கியது. இன்னமும் பிடிபடாமல் இருக்கும் சிலரும் தப்ப முடியாது” என்று ராய்கர் மாவட்ட காவல்துறை தலைவர் எஸ்.பி. சதானந்த் குமார் தெரிவித்தார்.