கோல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு சிக்கிம் மாநிலத்தில் இன்னமும் மழை விட்டபாடில்லை.
அங்கு சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படும் 140 பேரை மீட்க அதிகாரிகள் படாதபாடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து மழை பெய்வதால் மீட்புப் பணி மிகவும் சிரமமாக இருக்கிறது என்று சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சிக்கிமில் கடந்த புதன்கிழமை மேக வெடிப்பு காரணமாக திடீர் பேய்மழை பெய்ததால் லோனாக் என்ற ஏரி உடைந்து டீஸ்டா என்ற ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
அதில் 15 ராணுவ வீரர்கள் உட்பட பலரும் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
“கொஞ்சம் மழைவிட்டு பருவநிலை மேம்படும் என்று காத்திருக்கிறோம்.
“அப்போதுதான் விமானப் படையும் இதர மீட்புப் குழுக்களும் மும்முரமாக பணியில் இறங்க முடியும்,” என்று சிக்கிம் மாநில தலைமைச் செயலாளர் விபி பத்தக் சனிக்கிழமை கூறினார்.
மழை வெள்ளம் காரணமாக மாண்டவர்கள் எண்ணிக்கை சனிக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 56 ஆக அதிகரித்துவிட்டது என்று மீட்புப் பணிகளை மேற்பார்வையிடும் அரசாங்க அதிகாரி ஒருவர் தலைநகர் காங்கோக்கில் தெரிவித்தார்.
சிக்கிம் முழுவதும் மட்டுமன்றி அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்தின் வட பகுதியிலும் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் பணியில் உள்ளனர். டீஸ்டா ஆற்றுக் கரை நெடுகிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, வட சிக்கிமில் உள்ள லாசுங், லாசென், சுங்துங் ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்த சுமார் 2,000 சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறவினர்களுடன் பேச வசதியாக அதிகாரிகள் அவர்களுக்குக் கைப்பேசிகளைக் கொடுத்து இருப்பதாகவும் வேறோர் அதிகாரி கூறினார்.
வெள்ளத்தில் 13 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மீட்புப் பணி மேலும் சிக்கலாகிவிட்டது.
சிக்கிம் மாநிலத்தையும் மேற்கு வங்காளத்தின் சிலிகுரி என்ற பகுதியையும் இணைக்கும் முக்கியமான நெடுஞ்சாலை வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்தது.
மலை ஏறும் வழிகளைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளில் ஈடுபட அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் முயன்று வருவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சின் பேச்சாளர் திருவாட்டி பண்டனா செத்திரி தெரிவித்தார்.
சிக்கிம் 50 ஆண்டுகால வரலாறு காணாத பேரிடரை எதிர்நோக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேப்பாளம், பூட்டான், சீனாவை எல்லைகளாகக் கொண்ட இந்திய மாநிலமான சிக்கிமில் சுமார் 650,000 பேர் வசிக்கிறார்கள்.