புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
அதையடுத்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பாஜகவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் சௌரவ் பரத்வாஜ், அமைச்சர் அதிஷி உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்குச் செல்லும் சாலைகளில் பல அடுக்கு தடுப்புகளை ஏற்படுத்தி காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை எதிர்த்து பாஜக அலுவலகம் முன்பு நேற்று முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் போராட்டம் காரணமாக மத்திய டெல்லிக்குச் செல்லும் பாதையைத் தவிர்க்குமாறு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக தலைமை அலுவலகம், அமலாக்கத் துறை அலுவலகம் உள்ள மத்திய டெல்லி சாலை மூடப்பட்டுள்ளது.
காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்கள், மனிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் போன்றவர்களின் கைது உட்பட இந்த வழக்கில் எடுக்கப்பட்டிருக்கும் பதினாறாவது கைது நடவடிக்கையாகும்.
இதனிடையே, டெல்லி அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், “அமலாக்கத் துறையினர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மூலை முடுக்கு எல்லாம் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்து ரூ.70,000 மட்டும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கைப்பேசி கைப்பற்றப்பட்டுள்ளது.
“அமலாக்கத் துறை எந்த ஓர் ஆதாரத்தையோ, சொத்து ஆவணங்களையோ, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை அல்லது அதற்கான ஆவணம் எதையும் கைப்பற்றவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.
சிறையிலிருந்து ஆட்சி செய்வார்
இதனிடையே, நள்ளிரவு விசாரணை மூலமாக அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வியாழன் இரவு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், “சிறையில் இருந்தபடியே அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகத் தொடர்வார். தேவைப்பட்டால் அவர் சிறையில் இருந்தே அரசை நடத்துவார். அவர் குற்றவாளி என்று முடிவாகும் வரை சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் முதல்வராக தொடரக்கூடாது என்று எந்த விதிகளும் இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.
“அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக பதவிவிலக வேண்டும். கெஜ்ரிவால் சிறையில் இருந்து ஆட்சி செய்வார் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறுவது அரசியல் அமைப்பு விதிகளை அவமதிக்கும் செயலாகும்,” என்று டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், முதல்வர் கெஜ்ரிவால் கைது நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.