புதுடெல்லி: ஹரியானாவின் முன்னாள் அமைச்சரும் பிரபலத் தொழில் நிறுவனமான ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“ஹிசார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பத்தாண்டுக் காலம் இருந்திருக்கிறேன். ஹரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
சாவித்ரி ஜிண்டாலின் மகனும் தொழில் அதிபருமான நவீன் ஜிண்டால், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் குருக்ஷேத்ரா மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிண்டாலின் விலகலை அடுத்து, 84 வயதாகும் அவரது தாய் சாவித்ரி ஜிண்டாலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்தியாவின் முதல் பணக்காரப் பெண்மணி சாவித்ரி ஜிண்டால். அதோடு, உலகின் ஐம்பதாவது மிகப் பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார். ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வருகிறது. ஜிண்டால் குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ. 2.45 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.