அன்பு, காதல் போன்ற உலகளாவிய உணர்வுகளை அளவிடுவது சாத்தியமற்றது. இந்த அம்சங்களை பரதநாட்டியத்தின் மூலம் ஆராய்கிறது ‘லவ் ஆல் அரவுண்ட்’ எனும் மேடை நடன நிகழ்ச்சி.
‘அபயா’ எனும் பரதநாட்டியக் குழுவின் முதல் மேடை நடன நிகழ்ச்சியான இது, மூன்று நாள்களுக்கு எஸ்பிளனேட் அரங்கில் இடம்பெற இருக்கிறது.
பல நாள்கள் கடும் ஒத்திகை மேற்கொண்ட ‘அபயா’ குழு, தனது முதல் மேடை நடன நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் சற்று தனித்துவமானவை என்று குறிப்பிட்டுள்ளது.
“பாரம்பரிய பரதத்தைப் பேரளவில் பின்பற்றாத ஒரு படைப்பை உருவாக்குவது எங்களுக்கு சவாலாக அமைந்தது. இன்றைய நவீன சூழலுக்கு ஏற்ப அன்பெனும் கருப்பொருளை நடனத்தின் மூலம் விளக்க விரும்பினோம்,” என்றார் கிரித்திகா சோமசுந்தரம், 29.
மாதுரி சுரேஷ், 30, வர்ஷா விஷ்வநாத், 30, இருவரும் அபயா நடனக்குழுவின் மற்ற இரண்டு நடனமணிகள்.
“அனைத்து அம்சங்களும் ஒன்றிணைந்த ஒரு தயாரிப்பை ஏற்பாடு செய்வது கடின வேலை என்பது நாங்கள் மூவரும் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம். பரதநாட்டியம் பயின்ற டெம்பிள் ஆஃப் த ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கலைக் கழகம் மூலம் பெரிய அளவில் நிகழ்ந்த பல்வேறு தயாரிப்புகளில் பங்கேற்றது எங்களுக்கு அனுபவத்தை அளித்துள்ளது,” என்றார் அவர்.
அபயாவின் முதல் மேடை நடன நிகழ்ச்சியான ‘லவ் ஆல் அரவுண்ட்’, ஜனவரி 12-14 தேதிகளில் எஸ்பிளனேட் அரங்குகளில் நடைபெறவுள்ளது.
மேல் விவரங்களுக்கும் நுழைவுச்சீட்டுகளுக்கும் https://tinyurl.com/LoveAllAroundAbhaya எனும் இணையத்தளத்தை நாடலாம்.