ஒரே ஆண்டில் 12 தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்றுவிட்ட காரணத்தால் ஜப்பானிய உணவகம் ஒன்று செயல்படுவதற்கு இரண்டு வாரத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 99 தஞ்சோங் பகாரில் அமைந்துள்ள ‘தெப்பன் கப்பாவ் கெஞ்சி’ என்ற அந்த உணவகத்துக்கு $800 அபராதமும் விதிக்கப்பட்டது.
உதவியாளரைப் பதிவு செய்யத் தவறியதாலும் உரிமம் பெற்ற ஓர் இடத்தின் தூய்மையைக் கட்டிக்காக்கத் தவறியதாலும் மொத்தம் 12 தகுதியிழப்புப் புள்ளிகளை உணவகம் பெற்றது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு டிசம்பர் 20ஆம் தேதியன்று தெரிவித்தது.
உணவகத்தில் அதிகமான கரப்பான்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், உணவக வளாகத்தில் உணவைக் கையாளும் ஊழியர்கள் அனைவரும் மீண்டும் தங்கள் பணியைத் தொடங்குவதற்குமுன் ஊழியர் திறன் தேர்ச்சித் திட்டத்தின் உணவுப் பாதுகாப்பு தொடர்பான முதலாம் நிலையில் தேர்ச்சி பெற வேண்டும்.
அத்துடன் வளாகத்தில் பணிபுரியும் அனைத்து உணவு சுகாதார அதிகாரிகளும் ஊழியர் திறன் தேர்ச்சித் திட்டத்தின்கீழ் உணவுப் பாதுகாப்பு தொடர்பான மூன்றாம் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உணவகம் அடுத்த மாதம் 2ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.