இசைகளின் சங்கமத்தின் மூலம் இன நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் சிங்கப்பூர் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் அம்ரித்தா தேவராஜ்.
கடந்த 19 ஆண்டுகளாக கர்நாடக இசை கற்று வரும் இவர், சிறு வயது சீன நண்பர்களுடன் வளர்ந்ததால், பள்ளியில் சீன மொழியை இரண்டாம் பாடமாகத் தேர்ந்தெடுத்தார்.
அழகான தமிழில் பேசி, பாடும் இவர், சீன மொழியிலும் பிழையற எழுதுவதையும்,பேசுவதையும் கண்ட ஆசிரியர்கள் அவரை சீன மொழிப் பாடல்கள் கற்று, சிங்கப்பூரின் தனித்துவம் வாய்ந்த சின் யாவ் இசைப் போட்டியிலும் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினர்.
கர்நாடக இசை, மேற்கத்திய இசை, சீன இசை, ‘கீபோர்டு’ வாசிப்பு என அனைத்திலும் அசத்தும் அம்ரித்தா, இவ்வாண்டு தீபாவளியன்று அதிபர் மாளிகை பொது வரவேற்பின்போது 12 நிமிட ‘ஃபியூஷன்’ (இந்திய - சீன பாரம்பரிய இசைக் கலவை) இசைக் கச்சேரியும் நிகழ்த்தினார்.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டிருக்கும் அம்ரித்தாவுக்கு, விடுமுறைக்காக சிங்கப்பூர் வந்தபோது புல்லாங்குழல் கலைஞர் டான் சிங் லூன் மூலம் இந்த வாய்ப்புத் கிட்டியது. “இவ்வாய்ப்பைம் பெரும்பேறு என்றும் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று,” என்றும் மகிழ்ந்தார் அவர்.
தாய்வழிப் பாட்டியான திருவாட்டி தங்கமணியும் இசைக்கலைஞர் என்பதால் அம்ரித்தாவுக்கு சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக இசை பயின்று வரும் இவர் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்றுள்ளார்.
இந்தியப் பாரம்பரிய இசைமேல் காதல், சீன இசைமீது ஆர்வம், மேற்கத்திய இசையையும் ஒரு கை பார்த்துவிட வேண்டுமென்கிற துடிப்பு, இரு மொழி ஆளுமை என சிங்கப்பூரின் சிறந்த நல்லிணக்கத்தின் வெளிப்பாடாகவே விளங்குகிறார் 20 வயதான அம்ரித்தா.
கல்வி, கலை என இரண்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள அம்ரித்தா, மேலும் பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்வதோடு, கர்நாடக இசையிலும் ஆழ்ந்த தேர்ச்சி பெற விரும்புவதாகக் கூறினார்.
“இசையையும் மருத்துவத்தையும் ஒருசேர மேற்கொள்வது நிறைவாகவும் மகிழ்வாகவும் உள்ளது,” என புன்சிரிப்புடன் பகிர்ந்தார் அம்ரித்தா.