இந்தியா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 எனும் ஆட்டக் கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதன்கிழமை (மார்ச் 22) நடந்த மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
270 ஓட்ட எண்ணிக்கையை இலக்காகக் கொண்ட இந்திய அணி, 49.1 ஓவர்களில் 248 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. இந்திய அணியின் நடுவரிசை பந்தடிப்பாளர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலக்கை எட்டுவது அணிக்கு இமாலய பணியாகிவிட்டது.
இந்திய அணி தரப்பில் விராத் கோஹ்லி அதிகபட்சமாக 54 ஓட்டங்களை எடுத்தார்.
ரோகித் சர்மா, ஷுப்மன் கில், ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் ஓட்டங்களை எடுத்து அணியை ஓரளவு கரைசேர்த்தபோதிலும் முக்கியமான தருணங்களில் அவர்கள் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் வந்த பந்தடிப்பாளர்கள் சோபிக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸம்பா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முன்னதாக, பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், பந்தடிப்பைத் தேர்வுசெய்தார்.