நோம்பென்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று சிங்கப்பூரின் ஆண்கள் நீர்ப்பந்து அணி பிலிப்பீன்சை 10-4 என்னும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
நோம்பென் தேசிய ஒலிம்பிக் நீச்சல் மையத்தில் நடைபெற்ற போட்டியில் வென்றதன் மூலம் சிங்கப்பூரின் தங்கக் கனவு நனவாவது நெருங்கி வருகிறது. கம்போடியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டம் தங்கப்பதக்கத்தை நிர்ணயிக்கும்.
சிங்கப்பூர் வெற்றியின் விளிம்பில் நிற்கிறது. இன்றைய ஆட்டம் சமநிலையில் முடிந்தால்கூட சிங்கப்பூர் தங்கத்தை வென்றுவிடும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. காரணம், கம்போடியா விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
எனவே, இன்று சிங்கப்பூரை வெல்வதோ ஆட்டத்தை சமப்படுத்துவதோ கம்போடியாவுக்கு மிகக் கடினமானதாக இருக்கும். சிங்கப்பூர் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று 12 புள்ளிகளுடன் பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது.
தென்கிழக்காசிய ஆண்கள் நீர்ப்பந்தின் 54 ஆண்டுகால வரலாற்றில் 2019ஆம் ஆண்டு மட்டுமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தை சிங்கப்பூர் இழந்தது. அந்தப் போட்டியில் வென்ற இந்தோனீசியாவை நேற்று முன்தினம் சிங்கப்பூர் வென்று பழிதீர்த்துக்கொண்டது.