ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் பெண்கள் காற்பந்து அணி, வடகொரியாவிடம் 10-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி கண்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு ஆசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர், இதே வடகொரியாவிடம் 7-0 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து இப்போது அதைவிட மோசமான கோல் எண்ணிக்கையில் சரிந்தது.
இந்த ஆட்டத்தில் வடகொரியாவின் 21 வயது வீரர் கிம் கியோங்யோங் ஐந்து கோல்களைப் போட்டார். அன் மியோங் சோங், ரி மியோங்குன், மியோங் யூஜோங், போங் சொங்கே ஆகியோர் மற்ற கோல்களைப் போட்டனர்.
ஆசிய விளையாட்டுகளின் பெண்கள் காற்பந்துப் போட்டியில் ‘சி’ பிரிவில் சிங்கப்பூர் கடைசி இடத்தில் உள்ளது. வடகொரியா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இப்பிரிவில் மூன்றாவது அணியாக கம்போடியா இடம்பெற வேண்டியிருந்தது. ஆனால் கடைசி தருணத்தில் அந்த அணி பின்வாங்கிக்கொண்டது.
அதனையடுத்து பெண்கள் காற்பந்துப் பிரிவுகள் மீண்டும் வரையப்படவில்லை. அதற்குப் பதிலாக ‘சி’ பிரிவில் இவ்விரு அணிகளும் இரண்டு முறை மோதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐந்து பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இரண்டாவது இடத்தில் வரும் அணிகளில் ஆகச் சிறப்பாகச் செய்யும் மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுத்ம.
‘சி’ பிரிவில் மட்டும்தான் இரண்டு அணிகள் இடம்பெறுகின்றன. மற்ற பிரிவுகளில் மூன்று அல்லது நான்கு அணிகள் உள்ளன.
சிங்கப்பூரின் பெண்கள் காற்பந்து அணி, முதன்முறையாக ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்கிறது.