ஹைதராபாத்: இந்தியாவில் நடந்துவரும் உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரில் சாதனைகள் முறியடிக்கப்படுவதும் புதிய சாதனைகள் நிகழ்த்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையிலான முதல் போட்டியிலேயே அது தொடங்கிவிட்டது.
அனைத்துலக ஒருநாள் போட்டி வரலாற்றில் ஓர் அணியின் (இங்கிலாந்து) 11 ஆட்டக்காரர்களும் இரட்டை இலக்கத்தில் ஓட்டங்களைப் பதிவுசெய்தது அப்போட்டியில்தான்!
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு போட்டியில் முதலில் பந்தடித்த இலங்கை அணி 50 ஓவர்களில் 344 ஓட்டங்களைக் குவித்தது. ஆயினும், பத்துப் பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே அவ்விலக்கை எட்டி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கோட்டைத் தொட்டது பாகிஸ்தான்.
உலகக் கிண்ண வரலாற்றில் இதற்குமுன் எந்த ஓர் அணியும் இவ்வளவு பெரிய இலக்கை எட்டியதில்லை.
2011ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 329 ஓட்டங்களை எடுத்து வென்றிருந்ததே முன்னைய சாதனை.
இலங்கை-பாகிஸ்தான் போட்டியில் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம (இருவரும் இலங்கை), அப்துல்லா ஷஃபிக், முகம்மது ரிஸ்வான் (இருவரும் பாகிஸ்தான்) என மொத்தம் நால்வர் சதம் அடித்திருந்தனர். உலகக் கிண்ண வரலாற்றில் இப்படி ஒரே போட்டியில் நால்வர் சதமடித்ததும் இதுவே முதன்முறை.
உலகக் கிண்ணத் தொடரில் தனது அறிமுகப் போட்டியிலேயே சதமடித்த முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைத் தேடிக்கொண்டார் ஷஃபிக்.
உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இதுவரை எட்டு முறை மோதியுள்ள நிலையில், அவை அனைத்திலுமே பாகிஸ்தானே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில், இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான குசல் பெரேரா ஓட்டமேதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஆயினும், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான பத்தும் நிசங்காவுடன் இணைந்த குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆடி ஓட்டம் குவித்தார்.
மெண்டிஸ் 65 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிவேக சதமடித்த இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் தேடிக்கொண்டார். அவர் 77 பந்துகளில் 122 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணியின் நான்காவது ஆட்டக்காரராகக் களமிறங்கிய சதீர சமரவிக்ரமவிற்கும் இந்தப் போட்டி மறக்க முடியாத ஒன்றாக ஆகிப்போனது. இந்தப் போட்டியில் அடித்த சதமே அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதலாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஆடிய இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. மாறாக, இலங்கை அணியோ இரண்டிலுமே தோற்றுப்போனது.
அடுத்ததாக, வரும் சனிக்கிழமை 14ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவையும் திங்கட்கிழமை 16ஆம் தேதி நடக்கவுள்ள போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியாவையும் எதிர்த்தாட இருக்கின்றன.