லண்டன்: கபடி ஆட்டம் தென் ஆசியாவில் மிகவும் பிரபலமானது. உலகளாவிய போட்டிகளில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்நிலையில், தங்கள் கபடித் திறன்களை மேம்படுத்த சில பிரிட்டிஷ் ஆட்டக்காரர்கள் சொந்த நாட்டில் செய்துகொண்டிருந்த வேலையிலிருந்து விலகி இந்தியா சென்று பயிற்சி செய்து வருகின்றனர்.
அவர்களில் ஃபிளிக்ஸ் லீயும் யுவராஜ் பாண்டியாவும் அடங்குவர்.
அவர்கள் இருவரும் தற்போது இந்திய புரோ கபடிப் போட்டியில் களமிறங்கும் டபாங் டெல்லி அணியில் சேர்ந்து விளையாடுகின்றனர்.
“இந்தியாவில் கற்றுக்கொள்ளும் கபடித் திறன்களை ஃபிளிக்ஸ் லீ காணொளி எடுத்து பிரிட்டனில் உள்ள கபடி ஆட்டக்காரர்களுக்கு அனுப்பி வைக்கிறார்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பாண்டியா தெரிவித்தார்.
பங்ளாதேஷில் நடைபெற்ற கபடிப் போட்டியில் இங்கிலாந்து அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த பிறகு 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து லீயும் பாண்டியாவும் இந்தியாவில் பயிற்சி செய்து வருகின்றனர்.