சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக 63 வயது தொழிலதிபர் ஜார்ஜ் கோ சிங் வா அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஹார்வி நோர்மன் சில்லறை விற்பனைக் கடையை சிங்கப்பூருக்கு கொண்டுவந்த இவர், சிங்கப்பூர் பங்குச் சந்தையில் இடம்பெறும் ஓசியா இன்டர்நேஷனலின் குழும நிர்வாகத் தலைவராக உள்ளார்.
கடந்த 2017 முதல் சிங்கப்பூரில் வசித்தபடியே மொராக்கோவுக்கான தூதராக பதவி வகித்து வரும் இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜூன் 9ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகினார்.
மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஜூன் 8ஆம் தேதி அறிவித்தார். ஜூலை 7ஆம் தேதி மக்கள் செயல் கட்சியில் இருந்தும் மூத்த அமைச்சர், சமூக கொள்கை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பதவிகளில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்தார்.
அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் செப்டம்பர் 13ஆம் தேதி முடிவடைகிறது. மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
“ஆளும் கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால், அதிபர் ஆவதற்கு (திரு தர்மன்) சரியானவரா என்பதுதான் கேள்வி. குறிப்பாக, தேசிய இருப்பு, முக்கிய பொதுத் துறை நியமனங்கள் தொடர்பான இரு முக்கியமான அங்கங்களில் அரசாங்கத்தை சரிபார்ப்பதில் அதிபரின் பங்கைக் கருத்தில் கொள்ளும்போது,” என்று நேற்று வெளியிடப்பட்ட திரு கோவின் அறிக்கை கூறியது.
“அதிபர் பதவியின் நேர்மையைப் பேணுவதற்கு, அதிபர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருப்பதோடல்லாமல், அப்படிப்பட்ட எண்ணம் நிலவ வேண்டும்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
திரு கோ சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என அறிக்கை கூறியது.
விளையாட்டுத் துறை பொருள்களுக்கான சில்லறை விற்பனைக் கடையான வேர்ல்ட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நடத்தும் நிறுவனம் உள்பட சிங்கப்பூர், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு திரு கோ உரிமையாளராக உள்ளார் என அவரது தனிப்பட்ட இணையத்தளம் குறிப்பிடுகிறது.
அவரும் அவரது மனைவி லைசா சுமாலியும் இணைந்து 2015ல் ‘பார்டர் மிஷன்’ தொண்டு நிறுவனத்தை நிறுவினர். இது சிங்கப்பூர், இமயமலைப் பகுதி மற்றும் வளரும் நாடுகளில் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்கிறது.
திரு கோ அதிபர் பதவிக்குப் போட்டியிட தகுதி பெறுவாரா என்பது தெளிவாக இல்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய அரசியல் கணிப்பாளர்கள் கூறினர்.
தனியார் துறையினருக்கான தகுதியைப் பூர்த்தி செய்ய, ஒருவர் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக குறைந்தது மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் நிறுவனம் சராசரியாக குறைந்தது $500 மில்லியன் பங்குதாரர்களின் பங்குகளை வைத்திருக்க வேண்டும். வரிக்குப் பிறகு லாபம் ஈட்டியிருக்க வேண்டும். மூன்றாண்டு காலம், அண்மைய காலகட்டமாக இருக்க வேண்டும்.
அத்தகைய நிறுவனத்தில் ஆக மூத்த அதிகாரியாக இருந்த ஒருவர் தகுதி பெறலாம் என்றும் சட்டம் கூறுகிறது.
வால் ஸ்திரீட் ஜர்னலின் சந்தைத் தரவுகளின்படி, 2021 முதல் 2023 வரை ஓசியா இன்டர்நேஷனலில் பங்குதாரர்களின் பங்குகளில் சராசரியாக $50m இருந்தது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இந்த அதிபர் தேர்தலில் அனைத்து இனத்தவரும் போட்டியிடலாம். பிரதமர் லீ சியன் லூங் தேர்தல் ஆணையை வெளியிடுவார். விண்ணப்பங்களை ஏற்பது ஐந்து நாள்களுக்குப் பிறகு முடிவுறும். தகுதி பெறுவோர் நியமன நாளுக்கு முன்னர் அறிவிக்கப்படுவர்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பத்தை அதிபர் தேர்தல் குழுவிடம் (பிஇசி) இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
வேட்பாளர் எந்த இனப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதை நிர்ணயிக்க, மூன்று துணைக் குழுக்களை உள்ளடக்கிய சமூகக் குழுவிடம் அவர்கள் இனத் தகுதிநிலை உறுதியளிப்பை சமர்ப்பிக்க வேண்டும். இது அடுத்த இட ஒதுக்கீட்டுத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தீர்மானிப்பதற்காக என்று தேர்தல் துறை தெரிவித்தது.
விண்ணப்பப் படிவங்களை இன்று முதல் தேர்தல் துறை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தனது இணையத்தளத்தின் மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்துமாறு தேர்தல் துறை ஊக்குவிக்கிறது.
தேர்தல் ஆணை வெளியிடப்படும் தேதியில், ஏனைய தகுதிகளுடன் பொதுத்துறை அல்லது தனியார் துறையில் வேலைத் தகுதியைப் பெற்றிருந்தால் அவர் அதிபர் வேட்பாளராகத் தகுதி பெறுவார்.
எடுத்துக்காட்டாக, தனியார் துறை பின்னணியைக்கொண்ட விண்ணப்பதாரர், குறைந்தபட்சம் $500 மில்லியன் பங்குதாரர்களின் பங்குகளைக்கொண்ட நிறுவனத்தை கடந்த மூன்றாண்டுகள் தலைமை தாங்கி வழிநடத்தியிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்மை, நல்ல குணம், நற்பெயர் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
அதிபர் தேர்தல் குழுவுக்கு, பொதுச் சேவை ஆணையத்தின் தலைவர் திரு லீ சூ யாங் தலைமை தாங்குகிறார்.
பொதுச் சேவை ஆணையத்தின் உறுப்பினரான திரு எட்வர்ட் டி சில்வா சமூகக் குழுவின் தலைவராக உள்ளார். சீன, மலாய், இந்திய மற்றும் பிற சிறுபான்மை துணைக் குழுக்களும் உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலைவரும் நான்கு உறுப்பினர்களும் உள்ளனர்.
அதிபர் தேர்தலில் போட்டியிட இன்று முதல் விண்ணப்பிக்கலாம்