அரசாங்கம், சிங்கப்பூரர்கள் இடையே கடந்த ஓராண்டாக நடைபெற்றுவரும் கலந்துரையாடல் மூலம் புத்துணர்ச்சி பெற்ற, கட்டிறுக்கமான சமுதாயம் என்பது குறித்து ஒருமுகமான சிந்தனை உருவாகியுள்ளது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய கட்டிறுக்கம் வாழ்வில் வெற்றி, திறன்கள் குறித்து ஒரு புதிய கண்ணோட்டத்தை மையமாகக்கொண்டது. அந்தக் கண்ணோட்டம், திருத்தியமைக்கப்பட்ட சமூக ஆதரவுடன் ஒற்றுமையுணர்வு பற்றிய புதிய சிந்தனையையும் கொண்டிருக்கும் என்றார் திரு வோங்.
பொதுக் கொள்கை ஆய்வுக் கழகத்தின் 35வது ஆண்டுநிறைவில் பேசிய திரு வோங், சிரமமான வெளிநாட்டுச் சூழலில் உள்ளூரில் நாம் எதிர்நோக்கும் சவால்களையும் மீண்டும் வலியுறுத்தினார்.
எனினும், வாழ்வில் வெற்றி என்பதை அவரவர் முடிவு செய்துகொள்ள வேண்டும். இதில் குறிப்பிட்ட ஓர் அளவுகோல் இல்லை என்றும் அவர் விளக்கினார்.
ஆழமாகப் பதிந்திருக்கும் மனப்போக்கை மாற்றுவது அவசியம். ஆனால், அது எளிதான ஒன்றல்ல என்றார் அவர்.
மேலும், தகுதி அடிப்படை என்பது வாழ்வின் ஆரம்பகாலத்தில் பெறும் பள்ளிக்கல்வியுடன் முடிந்துவிடுவதில்லை. மாறாக, தகுதி அடிப்படை என்பது தொடர்ச்சியான ஒன்று என்றும் அது வாழ்வின் பல்வேறு கட்டங்களில் கிடைக்கப் பெறும் கற்கும் வாய்ப்புகளுடன் இணைந்த ஒன்று என்றும் அவர் கூறினார்.
சமூக ஆதரவைப் பொறுத்தவரையில், பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் தங்களின் சூழ்நிலைகளைத் தாங்களே கட்டுக்குள் கொண்டுவந்து அதை விரைந்து சமாளிப்பதில் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்ளும் வகையில் சிங்கப்பூர் அதன் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை வடிவமைப்பதில் கவனமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் நிலையற்ற, கணிக்க முடியாத சூழலை எதிர்கொள்வதால், நடுத்தர மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பின்தங்கிவிடாமல் இருக்க அரசாங்கம் அதிகம் செய்யும் என்றார் அவர்.
ஒற்றுமை உணர்வைப் பொறுத்தவரை, “நாம்”, “நமது”, “நம்முடையது” என்பதே சமூகத்திற்கு அதிகம் தேவை. எவரும் தனியாக வெற்றி பெறுவதில்லை. ஒவ்வொரு வெற்றிக் கதையும் பகிரப்பட்ட கதை. நாங்கள் அனைவரும் எங்களுக்கு முன் வந்தவர்களின் தோள்களில் நிற்கிறோம்,” என்று திரு வோங்கூறினார்.
ஒவ்வொரு குழுவும் அதன் வேரையும் அடையாளத்தின் ஒரு பகுதியான பண்பாடு, மரபுகளையும் கொண்டாட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. அதே வேளையில், தங்கள் சொந்த சமூகங்களைத் தாண்டி சிங்கப்பூரர்களாக பொதுவான சிந்தனையை விரிவுபடுத்த அனைவரையும் ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார்.