தைப்பே: ஆப்பிள் நிறுவனம், ‘ஐபேட்’ தயாரிப்புக்கான வளங்களை வியட்நாமுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிடுவதாக நிக்கே நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆதாரங்களை மேற்கோள்காட்டி, டிசம்பர் 8ஆம் தேதி, அது அவ்வாறு தகவல் வெளியிட்டது.
முக்கிய சாதனத்திற்கான தயாரிப்பு வளங்களை ஆப்பிள் நிறுவனம் வியட்நாமிற்குக் கொண்டுசெல்வது இதுவே முதல்முறை.
இதன் தொடர்பில், சீனாவின் ‘பிஒய்டி’ நிறுவனத்துடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் செயல்படுவதாக நிக்கே நாளிதழ் கூறியது.
சோதனை அடிப்படையில் ஐபேட் தயாரிப்பதற்கான பொறியியல் சரிபார்ப்பு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாத மத்தியில் தொடங்கும். அந்தப் புதிய ரக ஐபேட், 2024ஆம் ஆண்டின் பிற்பாதியில் விற்பனைக்கு வரும்.
இது குறித்து, ஆப்பிள் நிறுவனமோ பிஒய்டி நிறுவனமோ கருத்துரைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 50 மில்லியன் ‘ஐஃபோன்’கள் தயாரிப்பதை ஆப்பிள் நிறுவனம் இலக்காக கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள், மேலும் பல மில்லியன் ஐஃபோன்களை அங்கு தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வால் ஸ்திரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது.