டெல் அவிவ்: காஸாவில் வெற்றிடத்தை விட்டுவைக்க இஸ்ரேலால் இயலாது என்று இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸோக் தெரிவித்து உள்ளார்.
வருங்காலத்தில் ஹமாஸ் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க அங்கு வலுவான படையை நிறுத்தி வைப்பதற்கான அவசியம் இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாம் திரும்பி வந்துவிட்டால் காஸாவை யார் கைப்பற்றுவது? எனவே அந்த வெற்றிடத்தை நாம் விட்டுவைக்கக் கூடாது. எது சாத்தியம் என்பது பற்றி யோசிக்க வேண்டி உள்ளது. பல்வேறு யோசனைகள் பரிசீலனையில் உள்ளன,” என்றார் திரு ஹெர்ஸோக்.
ஃபைனான்சியல் டைம்ஸ் ஊடகத்துக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அவர், காஸா ஒரு பயங்கரவாத பூமியாக மீண்டும் மாறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றார்.
போருக்குப் பின்னர் காலவரையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் என்று கடந்த வாரம் ஏபிசி நியூஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு குறிப்பிட்டு இருந்தார்.