ஜகார்த்தா: இந்தோனீசியா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அதற்காக யுஎஸ் டாலர் இருபது பில்லியன் டாலரை (S$27 பில்லியன்) திரட்ட அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா முதல் ஜப்பான் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய உறுதி தெரிவித்துள்ளன. கரிம வெளியேற்றம் இல்லாத வண்ணம் எரிசக்தி துறையை மாற்றும் நோக்கத்தோடு புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு நாடுகள் உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று இந்தோனீசியா அறைகூவல் விடுத்துள்ளது.
எரிசக்தி மாற்று பங்காளித்துவத்தின்கீழ் (ஜேஇடிபி) 2030ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி துறையில் 250 மில்லியன் மெட்ரிக் டன் கரிம வெளியேற்றத்தை குறைப்பது இந்தோனீசியாவின் இலக்காகும்.
இதன் ஒரு பகுதியாக ‘விரிவான முதலீட்டு மற்றும் கொள்கை’ (சிஐபிபி) எனும் உத்தேச முதலீட்டு திட்டத்தை செவ்வாய்க் கிழமை அன்று இந்தோனீசியா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இம்மாதம் முற்பகுதியில் பொதுமக்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு வரைவு அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டது.
இந்தோனீசியா, உலகின் ஆகப்பெரிய பசுமை எரிசக்தி உற்பத்தி நாடாக உள்ளது. அதன் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 2022ல் 12 விழுக்காட்டிலிருந்து 2030 44 விழுக்காட்டுக்கு அதிகரிக்க அது திட்டமிட்டுள்ளது.
“நாங்கள் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். 2030க்கு ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ளது. முன்னுரிமை அளிக்கப்படும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் பங்காளித்துவம் அவசியம். நிதி கடப்பாடும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று முதலீட்டு விவகாரங்களுக்கான இடைக்கால முதல்வர் எரிக் தோஹிர் தொடக்க நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்தோனீசியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய யுஎஸ் டாலர் 97.3 பில்லியன் மதிப்புள்ள முதலீடு தேவை என்று சிஐபிபி கோடிகாட்டியிருக்கிறது.
2030ஆம் ஆண்டுவாக்கில் தொடங்குவதற்குத் தேவையான 400 திட்டங்களுக்கான யுஎஸ் டாலர் 66.9 பில்லியன் நிதியும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.