தோக்கியோ: புறாக்கூட்டத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தியதும் இல்லாமல் ஒரு புறாவைக் கொன்றும் உள்ள ஜப்பானிய டாக்சி ஓட்டுநர் ஒருவரை அந்நாட்டு காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சாலையில் புறாக்கள் இருந்ததால் தனக்கு கோபம் வந்ததாக அந்த டாக்சி ஓட்டுநர் கூறியதாக அறியப்படுகிறது.
புறா ஒன்றைத் தன் காரைக் கொண்டு மோதிக் கொன்றதற்காக 50 வயது அட்சுஷி ஒஸாவா கைது செய்யப்பட்டார்.
வனவிலங்குப் பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக அவர் கைதானதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்துக்கு மாறியதும் ஒஸாவா மணிக்கு 60 கி.மீ வேகத்தில் புறாக்களை நோக்கிச் சென்றதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
உயிரிழந்த புறாவுக்கு விலங்குநல மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்தார் என்றும் புறா இறந்ததற்குப் பேரதிர்ச்சியே காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், ‘புறாவை மோதித் தள்ளியதற்காக ஒருவர் கைது செய்யப்படலாமா?’ என்று ‘எக்ஸ்’ தளப் பயனாளர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பில் கேட்டிருந்தார்.
ஓட்டுநர் தனது கார் ஹார்னை ஏன் ஒலிக்கவில்லை? வேண்டுமென்றே ஏன் புறாவைக் கொல்ல வேண்டும்? என்றெல்லாம் ஊடகவாசிகள் தொடர்ந்து கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர்.