வட கொரியா: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டுப் பெண்களுக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் அனைத்து அன்னையரையும் போற்ற நடைபெற்று வந்த வருடாந்திர தேசிய அன்னையர் மாநாட்டில் பேசிய திரு கிம்முக்கு கண்ணீர் பெருக்கெடுத்தபோது, அரங்கிலிருந்த ஆயிரக்கணக்கான அன்னையரும் கண்கலங்கினர். கிம் பின்னர் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் என்று கொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் வட கொரியாவில் பிள்ளைப்பேறு எண்ணிக்கை விரைவில் அதிகரிப்பதைக் காணலாம் என்று சிலர் கூறியுள்ளனர். “வட கொரியப் பிறப்பு விகிதம் இனி உயரலாம்,” என்று பத்திரிகையாளர் கொலின் ரக், எக்ஸ் தளத்தில் எழுதினார்.
தாய்மார்களுக்கு வீட்டை நிர்வகிப்பதில் உதவுவதும் பிறப்பு விகிதத்தை குறையாமல் இருப்பதை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் கடமை என அவர் அம்மாநாட்டில் கூறியுள்ளார்.
வட கொரியாவில் 2023 கருவுறுதல் விகித கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சராசரியாக 1.8 ஆக உள்ளது, இது மக்கள் தொகையை நிலையானதாக வைத்திருக்க தேவையானதைவிட சற்றுக் குறைவு. அண்மைய ஆண்டுகளாக அங்கு நிலவும் உணவுப் பற்றாக்குறை பிறப்பு விகிதம் குறைவுக்கு ஒரு காரணமாகலாம் எனக் கூறப்படுகிறது.
வட கொரியா எதிர்கொள்ளும் தொடர்ச்சியான உணவுப் பிரச்சினைகளின் விளைவாக 10 மில்லியனுக்கும் அதிகமான வட கொரியர்கள், அல்லது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பு (FAO) குறிப்பிட்டுள்ளது.