ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மின்சிகரெட்டுகளுக்குப் புதிய வரி விதிக்கப்படும்.
மின்சிகரெட் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள தீர்வை வரிக்கு மேலாகக் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று இந்தோனீசிய நிதியமைச்சு டிசம்பர் 30ஆம் தேதி தெரிவித்தது.
தற்போது மின்சிகரெட்டுகளுக்கு அமலில் இருக்கும் தீர்வை வரியில் 10 விழுக்காட்டுத் தொகை புதிய வரியாக விதிக்கப்படும் என்று அது குறிப்பிட்டது.
“நீண்டகாலம் மின்சிகரெட்டுகளைப் பயன்படுத்தினால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்,” என்று கூறிய அமைச்சு, வழக்கமான சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் வரிகளுக்குப் பொருத்தமாக மின்சிகரெட்டிற்கும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகச் சொன்னது.
உலகில் புகைபிடிப்போர் ஆக அதிகமாக உள்ள நாடுகளில் இந்தோனீசியாவும் அடங்கும். 2018ஆம் ஆண்டு அது, மின்சிகரெட்டுகள் தயாரிக்கப் பயன்படும் திரவத்திற்கு 57 விழுக்காட்டு தீர்வை வரி விதித்தது.
ஏற்கெனவே 2024ஆம் ஆண்டில் மின்சிகரெட்டுகளுக்கான தீர்வை வரி அதிகரிக்கவிருக்கும் நிலையில், புதிய வரி குறித்து முறையாகக் கலந்தாலோசிக்கவில்லை என்றும் இது அமலாகும் நேரம் பொருத்தமானதாக இல்லை என்றும் மின்சிகரெட் தயாரிப்பாளர், வாடிக்கையாளர் குழுவான ‘பவினாஸ்’ கருத்துரைத்துள்ளது.
புதிய வரியை எதிர்த்து அரசாங்கத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பது குறித்துப் பரிசீலிப்பதாக அது கூறியது.