யங்கூன்: வடக்கு மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனக் கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணி, ஆளும் ராணுவத்துடன் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அக்குழுக்களில் ஒன்றான டிஎன்எல்ஏ-இன் தலைவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் அண்டை நாடான சீனாவின் தூதரும் பங்கேற்றதாக அவர் கூறினார்.
சீனாவுடனான வடக்கு எல்லையில் தங்கள் பகுதிகளின் ராணுவக் கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராடும் கிளர்ச்சியாளர்களுடன், 2021ல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்த மியன்மார் ராணுவம் அக்டோபர் பிற்பகுதியிலிருந்து கடுமையாகப் போராடி வருகிறது
அந்தக் கூட்டுத் தாக்குதல் ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு ராணுவத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. அத்துடன், எல்லை வர்த்தகப் பாதிப்பு, அகதிகள் வருகை குறித்து சீனாவிலும் கவலையை ஏற்படுத்தியது.
சீனத் தூதர் டெங் ஷி ஜின் ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில், மூன்று சகோதரத்துவக் கூட்டணி “மேலும் முன்னேறிச் செல்லாமல் தாக்குலை நிறுத்துவதற்கு” ஒப்புக்கொண்டது, என்று பேச்சுவார்த்தையின் தன்மை காரணமாக பெயர் குறிப்பிட மறுத்த டிஎன்எல்ஏ தலைவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
“(கூட்டணி) தரப்பிலிருந்து, எதிரி முகாம்கள் அல்லது நகரங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ராணுவத் தரப்பிலிருந்து, விமானத் தாக்குதல், குண்டுவீச்சு அல்லது கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது,” என்றார் அவர்.
மியன்மாரின் ராணுவம் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.