வாஷிங்டன்: அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய ஆயுதங்களை மனித உரிமை மீறல் தொடர்பான செயல்களுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளது.
அந்த தகவலை அமெரிக்கா புதன்கிழமை அன்று வெளியிட்டது. அமெரிக்கா விடுத்த கோரிக்கையை அடுத்து இஸ்ரேல் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வரை அவகாசம் கொடுத்திருந்தது.
இஸ்ரேல் உறுதியளித்தபடி நடக்கிறதா இல்லையா என்பதை அமெரிக்க அதிகாரிகள் மே மாதத்தில் ஆய்வு செய்து தகவல் தருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வெளியிட்டார். அதில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் நாடுகள் மனித உரிமை மீறல் செயல்களுக்கு தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் காஸா பகுதியில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் தான் மேற்கொண்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 50 துப்பாக்கிக்காரர்களை கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமை (மார்ச் 21) அன்று தெரிவித்தது.
அல் ஷிஃபா மருத்துவமனையில் போராளிகளைப் பிடிக்கும் நடவடிக்கைத் தொடரும் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.
இதுவரை அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக நடந்த ராணுவ நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் போராளிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் காஸா மீது போர் தொடுத்தது. அதில் 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.