கியவ்: உக்ரேனியத் தலைநகர் கியவ், அந்நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் லிவிவ் நகரம் ஆகியவற்றின் மீது ரஷ்யா கடுமையான ஆகாயப் படைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) காலை அந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து போலந்தைச் சேர்ந்த படைகளும் கூடுதல் விழிப்புநிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பலரைப் பலிவாங்கியிருக்கும் கடுமையான ஆகாயப் படைத் தாக்குதல்களில் ரஷ்யாவும் உக்ரேனும் ஈடுபட்டு வந்துள்ளன. பாக்முட் நகருக்கு மேற்கே இருக்கும் இவானிவ்ஸ்க கிராமத்தை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மறுநாள் கியவ், லிவிவ் நகரங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வெள்ளிக்கிழமையன்று (மார் 22) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் இசை மண்டபம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பூசல் மேலும் மோசமடைந்துள்ளது. அந்தத் தாக்குதலில் மாண்டோரின் எண்ணிக்கை 140ஐத் தாண்டிவிட்டது.
போலந்து எல்லைக்கு அருகே இருக்கும் லிவிவ் நகரின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஸ்ட்ரி வட்டாரம் தாக்கப்பட்டதாகவும் அப்பகுதியின் ஆளுநர் மேக்சிம் கொஸிட்ஸ்கி தெரிவித்தார்.