கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதின் இரண்டு மகன்களுக்கு எதிராக அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணை செய்து வருகிறது.
பல நாள்களாக நடக்கும் இந்த விசாரணை தங்களது 98 வயது தந்தையைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
1981ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தம் தந்தையை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று மகாதீரின் 63 வயது மகன் மொக்சானி தெரிவித்தார்.1981ஆம் ஆண்டில் தான் மகாதீர் மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.
கடந்த ஜனவரி மாதம் ஊழல் எதிர்ப்பு அமைப்பு அதிகாரிகள் தன்னையும் தமது சகோதரர் மிர்சானையும் அணுகியதாக மொக்சானி கூறினார்.
வெளிநாடுகளில் செய்யப்பட்ட வர்த்தகங்கள் குறித்த விசாரணை என்று கூறிய அதிகாரிகள், அது மகாதீருக்குத் தொடர்புடையதா இல்லையா என்பதை தங்களிடம் கூறவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மொக்சானியின் கருத்துக்கு தற்போது பதில் ஏதும் தெரிவிக்க இயலாது என்று ஊழல் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
டாக்டர் மகாதீரின் அலுவலகமும் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
தற்போது நடக்கும் விசாரணை மிகவும் கடினமான ஒன்று என்றும் அது முடிய இன்னும் சில காலம் எடுக்கும் என்றும் மகாதீரின் மகன்கள் கூறினர்.