விண்வெளியில் மனிதர்கள் சென்று வாழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அறிவியல் துறையில் அதற்கான அடித்தளத்தை என் போன்ற இளையர்கள் முன்னெடுத்து வருகிறோம் என்றும் கூறுகிறார் சிங்கப்பூர் விண்வெளித் துறை சார்ந்த தனியார் நிறுவனமான ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ஸின் இணை நிறுவனரும் தலைமை இயக்க அதிகாரியுமான திரு பிரவீன் கணபதிபெருமாள், 31.
தன்னுடைய 12வது வயதில் மூத்த சகோதரர் தந்த அறிவியல் புனைகதை நூல் ஒன்று தன் வாழ்க்கையின் அடிநாதமாக மாறியது என்று நினைவுகளில் மூழ்கினார் இந்த இளையர்.
“ ‘ராண்டவூ வித் ராமா’ என்ற அந்தப் புத்தகம் அறிவியல் மீதான என் ஆர்வத்தைத் தூண்டும் திறவுகோலாக அமைந்தது. அந்த வயது முதலே விண்வெளி சார்ந்த துறையையே பணியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்,” என்றார் திரு பிரவீன்.
இந்தியாவில் பள்ளிக் கல்வியை முடித்த இவர் மேற்படிப்பிற்காக சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆக்கு பொருளறிவியல் பொறியியல் துறையில் (Material Science and Engineering) பட்டப்படிப்பை முடித்த இவர் தொடர்ந்து அத்துறை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வந்தார்.
2017ஆம் நடைபெற்ற ஒரு விண்வெளித் துறை சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வில் திரு சைமன் என்பவரைக் கண்டார். சில மாத பழக்கத்திலேயே இருவரின் லட்சியமும் ஒத்துப்போகவே அதே ஆண்டில் ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ நிறுவனத்தை இவ்விருவரும் தொடங்கினர்.
நண்பர்களின் உதவியுடனும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வழங்கிய மானியத் தொகையாலும் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் மலேசியாவிலிருந்து விண்ணிற்கு 1 கி.மீ. தூரம் செல்லும் உந்துகணைஒன்றை இந்நிறுவனம் சொந்தமாக தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ‘ஸ்பேஸ் ஸோன் இந்தியா’ எனும் தனியார் விண்வெளி நிறுவனத்தின் முன்னெடுப்பில் 2022ஆம் ஆண்டு சென்னையிலிருந்து விண்ணிற்கு 3 கி.மீ. தூரம் செல்லக்கூடிய உந்துகணையைத் தயாரித்தது.
“உலகிலேயே முதன்முறையாக எந்த இடத்திலிருந்தும் ஏவக்கூடிய தளத்தின்மூலம் கலவை உந்துகணை (Hybrid Rocket) விண்ணில் செலுத்தப்படும் திட்டத்தை ‘ஸ்பேஸ் சோன் இந்தியா’ நிறுவனத்துடன் இணைந்து திட்டமிட்டுள்ளோம்,” என்றும் திரு பிரவீன் கூறினார்.
மேலும் ‘மிஷன் ரூமி’ எனும் இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்குமிடையில் அண்மையில் இந்திய விண்வெளி அறிவியல் வல்லுநர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில் துவாஸ் பகுதியில் உள்ள ‘இக்வடோரியல் ஸ்பேஸ்’ஸின் அலுவலகத்தில் கையெழுத்தானதையும் இவர் குறிப்பிட்டார்.
“அடுத்த திட்டமாக எங்களுடைய சொந்த உந்துகணை ‘டொராடோவை (Dorado)’100 கி.மீ. தொலைவு செல்லும் திறனுடனும் 25 கிலோ வரையிலான எடையைத் தாங்கும் சக்தியுடனும் உருவாக்கவுள்ளோம்” என்றும் இவர் பகிர்ந்துகொண்டார்.
விண்வெளித் துறையின் வளர்ச்சியை அரசாங்கம் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்ற நிலைமை மாறி வருகிறது. இது இத்துறையின் எதிர்காலச் சாதனைகளுக்கு முத்தாய்ப்பாக அமையும் என்றும் இவர் நம்பிக்கையுடன் கூறினார்.
“இத்துறையில் சாதிக்க பொருளியல் ரீதியான பலம் இருக்க வேண்டும் என்ற தவறான அனுமானம் பலரிடமும் உள்ளது. ஒரு சாதாரண நடுத்தரல் குடும்பத்தைச் சேர்ந்த மாணவனான நான் இத்துறையில் கண்டுள்ள வளர்ச்சியே இதற்கு சான்று,” என்றும் திரு பிரவீன் கூறினார்.