யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
வாழ்வில் நாம் கடந்துசெல்லும் பாதையில் பலரையும் சந்திப்பதுண்டு. அவர்கள் அனைவரும் நிரந்தரமாக நம் வாழ்க்கைப் பயணத்தில் இடம்பெறுவார்கள் என்று நாம் நம்புவோம். ஆனால், ஆண்டுகள் கடக்க, அது உண்மையன்று என்பது நமக்குப் புரிய வரும்.
நம் வாழ்வில் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து கூடவருவர் என்பதைக் கடந்த சில ஆண்டுகளில் நான் கற்றறிந்தேன்.
சிறு வயதில் நான் சந்தித்த நண்பர்கள் அந்தந்தக் காலகட்டங்களில் என் வாழ்வில் மிகவும் முக்கியமானவர்களாகத் தோன்றினர். வாழ்நாள் முழுவதும் அவர்கள் என் நண்பர்களாக இருப்பார்கள் என்று எண்ணிய நாட்கள் பல.
ஆனால், வளர வளர, அனைவரும் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் பயணம் செய்யத் தொடங்கினோம். அதன்பின், முன்பு இருந்த நெருக்கம் வெகுவாகக் குறைந்தது.
தொடக்கத்தில் இந்தப் போக்கு மனத்தில் பலத்த காயத்தை ஏற்படுத்தினாலும், காலவோட்டத்தில் இதுதான் வாழ்க்கையின் நியதி என்பதைப் புரிந்துகொண்டேன்.
அதோடு, வளர்ந்த பின்னர், நம்மிடம் சிரித்துப் பேசும் அனைவரும் நம் நண்பர்கள் அல்லர், நாம் கேட்க விரும்பாத உண்மைகளை முகத்திற்கு நேராகக் கூறுபவர்கள் அனைவரும் நம் விரோதிகளும் அல்லர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
யார் நமது நலத்தை மனதில்கொண்டு பழகும் நலம் விரும்பிகள் என்பதை ஆராய்ந்து நட்பு பாராட்ட வேண்டும் என்ற தெளிவும் அண்மையில் ஏற்பட்டுள்ளது.
‘உன் நண்பன் யார் என்று கூறு, நீ யார் என்று கூறுகிறேன்’ என்ற பொன்மொழிக்கு இணங்க நம் வாழ்வில் நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நம் வாழ்வின் திசையை நிர்ணயிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
ஆதலால், நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் வேளையில், கவனமாக இருப்பது அவசியமாகிறது.
நாம் நன்றாக இருக்கும் வேளையில் உடனிருந்து, அவதியுறும் நேரத்தில் விலகிச் செல்வோரை நம் வாழ்விலிருந்து எவ்வளவு விரைவாகக் களைகிறோமோ அவ்வளவு விரைவாக நம் வாழ்வு முன்னேற்றப் பாதையில் செல்லும்.
நமக்கு நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதைப்போலவே பிறருக்கு நாமும் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை உணர்கிறேன்.
நல்ல நண்பன் வளர்ச்சிக்கான விதை, தீய நண்பன் வளர்ச்சித் தோட்டத்தில் களை என்பது என் கருத்தாகும்.