ஹரினி ராஜசேகரன்
தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், வடிவமைப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளோர் அவற்றைச் சமுதாய நலத்திற்குப் பயன்படுத்த சிங்கப்பூர் செஞ்சிலுவை நல்லதொரு தளம்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்ற நான், கடந்தாண்டு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தில் இளையர் மேம்பாட்டு நிர்வாகியாகச் சேர்ந்தேன்.
தமிழர் பேரவை, வளர்தமிழ் இயக்கம் போன்ற அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் வழிநடத்தி வசதிகுறைந்த தமிழ் இளையர்களுக்கு உதவுவதில் நானும் பங்காற்றினேன். வாய்ப்புகளும் சலுகைகளும் எல்லோரையும் சம அளவில் சேர்ந்து அடைவதில்லை என்பதை அப்போதையை தொண்டூழிய அனுபவம் எனக்குக் கற்பித்தது.
சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் பிரிவில் மேம்பாட்டு மேலாளரான நான், வெவ்வேறு உயர்கல்வி நிலையங்களிலுள்ள செஞ்சிலுவைச் சங்கக் கிளைக் கழகங்களை நிர்வகித்து வருகிறேன்.
இந்தக் கிளைக் கழகங்களின் உறுப்பினர்கள் 17 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். பணித்திட்டங்களை செயல்படுத்துதல், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுதல், முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்றவற்றை இளம் தொண்டூழியர்கள் கற்று வருகின்றனர்.
அறநிறுவனம் என்றால் அதற்கு வர்த்தகத் தேவைகளும் உண்டு. லாப நோக்குடன் செயல்படும் நிறுவனத்தைப் போல அறநிறுவனத்திற்கும் சிறந்த நிர்வாக முறையும் சிறந்த நிர்வாகிகளும் தேவை.
அறநிறுவனத்தின் குறிக்கோள்களை முடிவு செய்வதிலும் அதனைச் செயல்படுத்துவதிலும் நான் பங்கு வகிக்கிறேன். கடுமையாக உழைக்கும் தொண்டூழியர்களைத் தட்டிக்கொடுத்து தொடர்ந்து செஞ்சிலுவைச் சங்கத்தைச் சார்ந்திருக்க உதவுவது என்னைப் போன்ற அதிகாரிகளின் கடமை என்பதை அறிந்துகொண்டேன்.
செஞ்சிலுவைச் சங்கம் தனக்கென வகுத்துக்கொண்ட இலக்குகளுடன் தொண்டூழியர்களின் விருப்பத்துடன் ஒத்தும் போகலாம் அல்லது வேறுபடலாம். ஆனால், இதைச் சமநிலைப்படுத்துவது இக்கட்டாக இருந்தாலும் மனிதாபிமான இயக்கத்தை முன்னெடுப்பதற்கு இளையர்கள் தேவை என்பதை அறிந்திருத்தல் அவசியம்.
இளையர்கள் முன்வந்து தங்கள் திறன்களை மனிதாபிமான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை சமூக சேவைத் துறை வரவேற்கிறது.