நாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்தவிதமான பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதற்கு கனகச்சிதமாகப் பொருந்துபவர்தான் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.
இதுவரை தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களை எல்லாம் தனது திறமைக்கு கிடைத்த தீனியாக நினைத்து அசாத்திய நடிப்பை வழங்கியவர், இப்போது முதல்முறையாக “நான் இதுவரை நடித்தது எல்லாம் போதும்டா சாமி, இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன்,” என கோவா அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார்.
வித்தியாசமான கதாபாத்திரம், கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் ‘பீசா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’ என வரிசையாக பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நாயகனாக உயர்ந்தார்.
இவர், கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார்.
அப்படத்தில் இவர் நடித்த வில்லன் பாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதைத் தொடர்ந்து ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது.
பின்னர் விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்’, கமலுக்கு வில்லனாக ‘விக்ரம்’ என இவர் எதிர்மறை பாத்திரங்களில் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் தமிழ் மட்டுமன்றி பாலிவுட், டோலிவுட்டில் இருந்தும் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.
இதுபோல், விஜய் சேதுபதி அண்மையில் வில்லனாக நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி.
இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் அண்மையில் கோவாவில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
“வில்லனாக நடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. இதுபோல் நடிப்பதில் சில சிக்கல்களை எதிர்நோக்கினேன். நாயகன்கள் சிலர் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதால்தான் வில்லனாக நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்,” என அவர் தெரிவித்துள்ளார்.
வில்லன் பாத்திரத்துக்கு நிறைய அழுத்தம் கொடுக்கப்படுகிறது. வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் கட்டுப்படுத்துவதால் இனி நடிக்கவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். நாயகனைவிடவும் வல்லமை பெற்றவனாக தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து நடிக்க வைக்கின்றனர்.
“நாயகன் கதாபாத்திரத்தை முன்னிறுத்துவதற்காக நான் நடித்த பல காட்சிகள் எடிட்டிங் அறையில் வெட்டி எறியப்பட்டுள்ளன. அதனால் சில ஆண்டுகள் வில்லனாக எந்தப் படத்திலும் நடிக்கவேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்,” என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார்.
‘ஜவான்’ படத்துக்குப் பின்னர் இந்த முடிவைக் கூறியிருப்பதால் ஒருவேளை அவரின் இந்த முடிவுக்கு ஷாருக்கான் கொடுத்த அழுத்தம் காரணமாக இருக்குமோ என்று சமூக ஊடகத்தில் பலரும் பேசி வருகின்றனர்.
இதனிடையே, தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் அஜித் குமாரும் ஒரு புது முடிவை எடுத்துள்ளார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அஜித்.
இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக ஒரே தயாரிப்பாளரிடம் இரண்டு, மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்து நடித்து வந்தார். இனி இதுபோல் ஒரே தயாரிப்பாளருக்கு தொடர்ந்து படங்கள் நடித்து தர வேண்டாம் என அஜித் முடிவு எடுத்துள்ளதாக சினிமா வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.