இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘வள்ளி மயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
இவர் ஒரு இசையமைப்பாளராக தன்னுடைய பணியைத் துவங்கினாலும் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகத்திறமையை கோலிவுட்டில் வெளிப்படுத்தி வருகிறார். தன்னுடைய படங்களுக்குத் தானே இசையமைத்தும் வருகிறார்.
அடுத்தடுத்த படங்களிலும் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் ‘ரத்தம்’, ‘கொலை’ போன்ற படங்கள் வெளியான நிலையில், அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் ‘வள்ளி மயில்’ படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
பெரும் பொருட்செலவுடன் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், சத்யராஜ் போராளியாகவும் நடிகர் விஜய் ஆண்டனி காவல் அதிகாரியாகவும் மிரட்டியிருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாக தகவல்.
படத்தில் சத்யராஜ், பாரதிராஜா, சுனில், கயல் தேவராஜ், பிரியா அப்துல்லா, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் 1980களில் புகழ்பெற்ற ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக விஜய் ஆண்டனி-சுசீந்திரன் கூட்டணி பிச்சைக்காரன் படத்தில் இணைந்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருந்த நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். விரைவில் படத்தின் ட்ரெயிலர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சுசீந்திரன், “ஒரு வில்லனைப் பின்னணியாகக் கொண்டு கதை நடக்கும். பிரகாஷ்ராஜ் சார் மிரட்டியிருக்கிறார். விஜய் ஆண்டனி, சத்யராஜுக்கு மிக முக்கியமான பாத்திரம். சத்தியராஜைச் சுற்றி நால்வர், அதேபோல், விஜய் ஆண்டனியைச் சுற்றி நால்வர் எனப் பெரிய கூட்டம் படத்தில் இருக்கும். மிகச் சிக்கலான கதை, அதை மிக எளிமையாகச் சொல்ல முயன்றுள்ளோம்,” என்றார்.
விஜய் ஆண்டனி பேசுகையில், “சுசீந்திரன் சாருடன் வேலை பார்த்தது மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி, அவருக்கு நான் ரசிகன். இமானுக்கும் ரசிகன். அவரது இசை குறித்து எனக்கு எப்போதும் ஆர்வம் இருக்கும். இந்தப் படம் வித்தியாசமான படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.
“படம் 80 காலகட்டத்தில் இருப்பதால் எனக்கு அதிக வேலை இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம், பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளோம்,” என்று ஆடை வடிவமைப்பாளர் ராதிகா குறிப்பிட்டார்.
“நாம் நடிக்கும் நிறைய படங்களில் நம் கொள்கைகள் பற்றி எல்லாம் பேச முடியாது. வேலை பார்க்க வந்துள்ளோம். அதை மட்டும் செய்யவேண்டும் எனச் செய்துவிட்டுப் போவோம். ஆனால் இந்தப் படம் என் கொள்கைகளை பேசக்கூடிய படமாக அமைந்ததில் மகிழ்ச்சி,” என சத்யராஜ் கூறியுள்ளார்.