வடகரை: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களும் வாக்காளர்களைக் கவர புதுப் புதுப் பாணிகளைக் கையாண்டு வருகின்றனர்.
கட்சிகள், வேட்பாளர்களோடு நின்றுவிடாமல் அவர்களின் ஆதரவாளர்களும் தங்களின் மனங்கவர்ந்தவர்கள் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான உத்திகளைக் கையாள்கின்றனர்.
அப்படி ஓர் உத்தியைக் கையிலெடுத்துள்ளார் கேரள மாநிலம், வடகரைத் தொகுதியில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஷஃபி பரம்பில். பாலக்காடு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மும்முறை வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருக்கும் இவர், இப்போது எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் வெளியிட்டுள்ள சுவரொட்டியைப் பார்க்கும்போது, முதலில் ‘திருமண அழைப்பிதழ்’போல் தெரியலாம்.
ஆயினும், கூர்ந்து பார்த்தால் அதில் இடம்பெற்றுள்ள சொற்கள் கவனத்தை ஈர்க்கக்கூடும்.
மணமகன் என்ற இடத்தில் கீழே ஷஃபியின் பெயரும் மணமகள் என்ற இடத்தில் ‘ஜனநாயகம்’ என்றும் இடம்பெற்றுள்ளன.
மேலும், தேர்தல் நாள் 2024 ஏப்ரல் 26 என்றும் நேரம் காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் என்றும் இடம் வாக்குச்சாவடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் ஏதோ வேடிக்கையாகத் தெரிந்தாலும், பின்னர் அது நாட்டின் தற்போதைய நிலைமை எனக் குறிப்பிட்டு, சில வரிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
“இந்தியாவை மீட்க தங்கள் குடும்பத்தோடு வாக்குச்சாவடிக்கு வந்து ‘கை’ சின்னத்தில் வாக்குகளைப் பதிவுசெய்ய தங்களை வரவேற்கிறோம்,” என்று ‘அழைப்பிதழில்’ கூறப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதியில் ஷஃபி வாக்கு சேகரிக்கும் படமும் இடம்பெற்றுள்ளது.
அதிகாரபூர்வமற்றது என்றாலும், இந்தத் ‘திருமண அழைப்பிதழ்’ சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.