பெங்களூரு: தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த தேவா என்ற 25 வயதுப் பெண்ணை சமையலுக்குப் பயன்படுத்தும் ‘குக்கரால்’ அடித்துக் கொன்றதாக 29 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
தேவா, வைஷ்ணவ் இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கல்லூரியில் படிக்கும்போது பழக்கமான இருவரும் ஈராண்டுகளாக பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்ததாகவும் கூறப்பட்டது.
தேவா தனக்குத் துரோகம் இழைத்ததாகச் சந்தேகித்த வைஷ்ணவ் அதனால் ஏற்பட்ட பூசலைத் தொடர்ந்து தேவாவைத் தாக்கினார்.
தேவாவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள இயலாத அவரது சகோதரி, பக்கத்து வீட்டினரைத் தொடர்புகொண்டார்.
அதன் பிறகு அவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய வைஷ்ணவை காவல்துறையினர் அடையாளம்கண்டு கைது செய்தனர். வைஷ்ணவ் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.