புதுடெல்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் அந்நாட்டு மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) அறிவித்திருந்தது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை, செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பின்னர் அதற்கான கால அவகாசம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
அதன்கீழ், 2,000 ரூபாய் நோட்டை வங்கியில் மாற்ற இன்றே (அக். 7) கடைசி நாளாகும்.
இன்றைக்குள் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாதவர்கள், நாளை முதல், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், ரூ.20,000 வரை மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை மட்டுமே மாற்ற இயலும்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 19 கிளைகளில், தனிநபரோ நிறுவனமோ இவ்வாறு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.