உலகளாவிய தொழில், சமூக மாற்றங்களைக் கண்காணித்து, அதற்கேற்ற கல்வித் திறன்களை வளர்த்துக்கொள்வது பணியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட வழிவகுக்கிறது.
‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ எனும் இணைப்புத் தொழில்நுட்பம், உருவாக்க செயற்கை நுண்ணறிவு என நான்காம் தொழில் புரட்சிக் காலத்தைக் கடந்து ஐந்தாம் தொழில் புரட்சிக் காலத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது.
அதே வேகத்துக்கு ஈடுகொடுத்து, தொழில்நுட்ப உலகில் தனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொள்ள மாணவர்களும் ஊழியர்களும் தொடர்ந்து திறனை மேம்படுத்துவதே வழி.
“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக தேவைகள் இருந்த மென்பொருள் உருவாக்குநருக்கான வாய்ப்புகள் குறையத் தொடங்கிவிட்டன. ஆதி முதல் அந்தம் வரை வலைத்தளத்தையும் செயலிகளையும் வடிவமைக்கும் ‘ஃபுல் ஸ்டேக் டிவெலப்பர்’களுக்கே சற்று வாய்ப்புகள் எஞ்சியுள்ளன,” என்கிறார் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நித்தியஸ்ரீ ஜெயசந்திரன், 24.
தரவு அடிப்படையில் செயல்படும் தொழில்நுட்ப உலகில், தரவுப் பகுப்பாய்வு உள்ளிட்டவற்றைக் கற்றுத் தேர்ந்தோருக்கு வாய்ப்புகள் அமையலாம் என்கிறார் அவர். அது பலருக்கு சுவாரசியமாக இல்லாவிட்டாலும், அதில்தான் எதிர்காலம் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் அவர்.
இவ்வாண்டில் அதிக வாய்ப்புகளும் சம்பள உயர்வும் பெற உதவும் சில தொழில்நுட்பத் திறன்கள்.
இணையப் பாதுகாப்பு
மின்னிலக்க அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இணையப் பாதுகாப்பு நிபுணத்துவம், அதிகம் நாடப்படும் திறன்களில் ஒன்று என்கின்றன ஆய்வுகள்.
தரவைப் பாதுகாப்பதும் இணைய நெறிமுறைகளை வகுப்பதும் தற்போதைய நிறுவனங்களின் அத்தியாவசிய தேவைகளாக மாறியுள்ளன. இவ்வகைப் புதிய திறன்கள் ஈர்க்கப்படும் என்பதோடு, குறிப்பிடத்தகுந்த பணி, வருமான அமைப்பை ஏற்படுத்தித் தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
தரவுப் பகுப்பாய்வு
தரவு அடிப்படையிலான தொழில் உலகில் தரவுச் செயலாக்கம், தரவுத் தொகுப்புகளைப் பிரித்தெடுக்கும் திறன், அவற்றிலிருந்து அர்த்தமுள்ள வடிவங்களைப் பிரித்தெடுத்தல், அவற்றைச் செயல்படுத்தக்கூடிய வணிக நுண்ணறிவுகளாக மொழிபெயர்க்கும் திறன் ஆகியவை தேவையுள்ள திறன்களாகக் கருதப்படுகின்றன.
இதனை ஒட்டிய திறன்களான ‘சீக்குவல்’, பைத்தன், நிரல் மொழி, தரவு காட்சிப்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை கற்றுக்கொள்வது தரவு விஞ்ஞானி, வணிக நுண்ணறிவு ஆய்வாளர், தரவு பொறியாளர் உள்ளிட்டவை வேலை வாய்ப்புகளையும் சம்பள உயர்வையும் ஏற்படுத்தித் தருகின்றன.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல்
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேச இலக்கை நோக்கிய பாதையில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் திறன்கள் இன்றியமையாதவை.
சுகாதாரப் பாதுகாப்பு முதல் நகர்ப்புறத் திட்டமிடல் வரையிலான துறைகளில் புதுமைகளைப் புகுத்தவும் செயல்படுத்தவும் இந்தத் தொழில்நுட்பங்கள் முக்கியமானவை. அவை அளிக்கும் வேலை வாய்ப்புகளை வசப்படுத்த, உரிய நிரல்மொழிகள், தானியக்க அமைப்புகளை உருவாக்கும் திறன்களை வளர்த்துக்கொள்வது உதவி செய்யும்.
‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ தொழில்நுட்பம்
பல்வேறு நிறுவனங்கள் செயல்திறனை மேம்படுத்தவும் செலவைக் கட்டுப்படுத்தவும் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ எனும் மேகக்கணினியை நோக்கி இடம்பெயர்வதால், பல்வேறு ‘கிளவுட்’ சேவை வழங்குநர்களில் பரிச்சயம், கிளவுட் பாதுகாப்பு, ‘டெவொப்ஸ்’ எனும் மென்பொருள் உருவாக்க முறை, கிளவுட் ஆர்கிடெக்சர் ஆகிய திறன்களை வளர்த்துக்கொள்வது தொழிநுட்பத் துறை வேலை வாய்ப்புகளை அள்ளித் தருகின்றன.
மென்பொருள் உருவாக்கம்
மென்பொருள் உருவாக்கும் நிபுணர்களுக்கான தேவை சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது. ஜாவா, பைத்தன், ஜாவாஸ்கிரிப்ட் உள்ளிட்ட நிரல் மொழிகளில் தேர்ச்சி, ‘ஃபுல் ஸ்டாக் டிவலப்மெண்ட்’ ஆகிய திறன்களை வளர்த்துக்கொள்வதால் தொழில்நுட்பச் சந்தையில் தனித்து நிற்க முடியும்.
பயனர் இடைமுக / பயனர் அனுபவ (UI/UX) வடிவமைப்புகள்
மின்னிலக்கச் சந்தை வளர்ச்சியில் பயனர் இடைமுக, அனுபவ வடிவமைப்புகள் உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற்றுள்ளன. ‘கிராஃபிக் டிசைன்’ எனும் வரைகலை வடிவமைப்பு, ‘இன்டரெக்டிவ் டிசைன்’, பயனர் ஆராய்ச்சி உள்ளிட்ட திறன்கள் பல வேலை வாய்ப்புகளை அளிக்கும் என்கின்றன ஆய்வுகள்.
வடிவமைப்புக் கொள்கைகள், ஃபிக்மா எனும் கருவி ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதும் உதவி செய்கின்றன.