தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பெருவிரைவு ரயில் பாதையின் நான்காம் கட்ட நிலையங்களை இவ்வாண்டு முற்பாதியில் திறப்பது இலக்கு என்று தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
“கூடுமானவரை விரைவில் திறக்க நாங்கள் முயற்சி செய்வோம். அதேவேளை திறப்பதற்கு முன்பு பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும்,” என்றார் திரு சீ. செவ்வாய்க்கிழமையன்று சீன மொழி நாளிதழான சாவ்பாவுடன் நடந்த நேர்காணலில் அவர் இதைக் குறிப்பிட்டார்.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் நான்காம் கட்டத்தில் ஏழு பெருவிரைவு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. நான்காம் கட்டம் தஞ்சோங் ரூ நிலையத்திலிருந்து பேஷோர் நிலையம் வரை நீடிக்கும்.
அப்பாதையில் ரயில்கள் சோதிக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தது. அதற்குப் பிறகு அதில் ரயில்களை இயக்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் மேலும் சில சோதனைகளை நடத்துவதுடன் சம்பந்தப்பட்டப் பணிகளை மேற்கொள்ளும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டபோது நிலப் போக்குவரத்து ஆணையம், தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையின் நான்காம் கட்ட நிலையங்கள் எப்போது எஸ்எம்ஆர்டியிடம் ஒப்படைக்கப்படும் என்பதைத் தெரிவிக்கவில்லை. கூடுதல் தகவல்கள் இருக்கும்போது அவை வெளியிடப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.