புருணை இளவரசர் அப்துல் மட்டீன், குமாரி அனிஷா ரோஸ்னா இருவரது திருமணக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் லீ சியன் லூங் ஜனவரி 13 முதல் 15 வரை புருணை செல்கிறார்.
பிரதமர் லீயை இளவரசர் மட்டீனின் தந்தையான புருணை சுல்தான் ஹசானல் போல்கியா அழைத்துள்ளார். பிரதமர் லீயுடன் திருமதி லீ, மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் செல்கின்றனர்.
ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் அரச திருமணச் சடங்கிலும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும் அரச விருந்திலும் அவர்கள் பங்கேற்பர். அரச விருந்துக்கு முன்னதாக பிரதமர் லீயும் திருமதி லீயும் மன்னர் போல்கியா, அவருடைய துணைவியார் இருவரையும் சந்திப்பர்.
பிரதமர் லீயின் பயணத்தின்போது, துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தற்காலிகப் பிரதமராக இருப்பார்.
32 வயதான இளவரசர் மட்டீன், ஜனவரி 11ஆம் தேதி 29 வயதான செல்வி அனிஷா ரோஸ்னாவை மணந்தார். பத்து நாள் திருமணக் கொண்டாட்டம் ஆடம்பரமாக நடைபெறுகிறது.
பண்டார் ஸ்ரீ பெகாவானில் உள்ள தங்கக் கூரை வேய்ந்த பள்ளிவாசலில் இஸ்லாமிய முறைப்படி திருமணச் சடங்கு நடைபெற்றது.
கொண்டாட்டத்தின் உச்சமாக ஜனவரி 14 அன்று அரச மாளிகையில் பெரிய அளவிலான அரச சடங்கும் ஊர்வலமும் இடம்பெறும்.