சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை இயக்குநர் ஹான் கொக் ஜுவான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 1) அவர் அந்தப் பொறுப்பை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக தலைமை நிர்வாக அதிகாரியான டான் மெங் டுயி 2018 பிப்ரவரி முதல் தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
ஆகக் கடைசியாக 2023 செப்டம்பரில் சிங்கப்பூர் அதிபர் தேர்தலை அவர் முன்னின்று கவனித்தார்.
அவருக்குப் பதில் திரு ஹானை தேர்தல் அதிகாரியாக பிரதமர் லீ சியன் லூங் நியமித்திருப்பதாக தேர்தல் துறை வியாழக்கிழமை (மார்ச் 28) தெரிவித்தது.
திரு ஹான், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத் தலைமை இயக்குநர் பொறுப்புக்கு முன்னதாக போக்குவரத்து அமைச்சின் துணைச் செயலாளராகவும் சட்ட அமைச்சின் துணைச் செயலாளராகவும் பணியாற்றியவர்.
தேர்தலை நடத்துவதும் அதனைக் கண்காணிப்பதும் தேர்தல் அதிகாரியின் கடமை.
பொதுத் தேர்தல் அல்லது அதிபர் தேர்தலின்போது வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பிலான பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளுடன் இணைந்து அவர் செயல்படுவார்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அவரே அறிவிப்பார்.
சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் 2025 நவம்பருக்குள் நடத்தப்பட வேண்டும்.
அடுத்த தேர்தல் தொடர்பான பொறுப்புகளில் ஏறக்குறைய 50,000 அரசாங்க அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என்று தேர்தல் துறை இம்மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தது.
வேட்பு மனுத் தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளில் அவர்களுக்குப் பயிற்சி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே, சில அரசாங்க ஊழியர்கள் வாக்களிப்பு நிலைய அதிகாரி பொறுப்பு தொடர்பான அறிவிப்புக் கடிதங்களை பெற்றுள்ளனர்.
இருப்பினும், அந்தக் கடிதம் பெறப்பட்ட நாளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் நாளுக்கும் இடையிலான சராசரி கால அளவு என்ன என்று கேட்கப்பட்டதற்கு தேர்தல் துறை பதில் அளிக்கவில்லை.
‘எல்லாம் சரியாக நடைபெற்றால்’ அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னரே தலைமைத்துவப் பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்க இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார்.
அதாவது மக்கள் செயல் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு நாளான 2024 நவம்பர் 21க்குள் அது நடைபெறலாம் என்று அப்போது கோடி காட்டியிருந்தார்.