புதுடெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான இந்திய அணியில் யார் யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் பயிற்றுவிப்பாளர் இகோர் ஸ்டீமச் சோதிடர் ஒருவரை நாடியதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த அச்சோதிடரை அனைத்திந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் குஷல் தாஸ், ஸ்டீமச்சிற்கு அறிமுகம் செய்துவைத்ததாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி கூறியது.
சென்ற ஆண்டு மே மாதம் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துவைத்ததை தாசும் ஒத்துக்கொண்டதாக அச்செய்தி குறிப்பிட்டது.
“ஆசியக் கிண்ணப் போட்டியில் பட்டம் வெல்ல, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கட்டாயமாக வெல்ல வேண்டி இருந்தது. அப்போட்டி ஜூன் 11ஆம் தேதி நடக்கவிருந்தது. அந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி அணியில் தாம் களமிறக்க வாய்ப்புள்ள 11 பேர் கொண்ட பட்டியலைச் சோதிடருடன் ஸ்டீமச் பகிர்ந்துகொண்டார்.
“அப்பட்டியலைப் பார்த்த சோதிடர் ‘நன்று’, ‘நன்றாக விளையாடுவார். மிதமிஞ்சிய நம்பிக்கையைத் தவிர்க்கவும்’, ‘சராசரிக்கும் குறைவான நாள்’, ‘இவரைக் களமிறக்காமலிருப்பது நல்லது’ என்பன போன்ற பதில்களைச் சோதிடர் அளித்தார்,” என்று அச்செய்தி தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜோர்டன், கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளுக்கு எதிராக இந்தியா விளையாடியது.
ஒவ்வோர் ஆட்டத்திற்கு முன்பாகவும் வீரர்கள் பட்டியலையும் காயமடைந்த வீரர்கள், மாற்று வீரர்கள் உள்ளிட்ட விவரங்களையும் சோதிடருடன் ஸ்டீமச் பகிர்ந்துகொண்டதாக அவ்வறிக்கை குறிப்பிட்டது.