பெங்களூரு: கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான இந்திய நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி நடப்பு ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே இன்னுமொரு அரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 50 முறை 50 ஓட்டங்களுக்குமேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ஏப்ரல் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
மும்பை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களை எடுத்தது. இரண்டாவதாகப் பந்தடித்த பெங்களூரு அணி, 16.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
அணித்தலைவர் டு பிளஸ்ஸி 73 ஓட்டங்களையும் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களையும் விளாசினர்.
ஐபிஎல் போட்டிகளில் கோஹ்லிக்கு இது 45வது அரைசதம். அவர் ஐந்து சதங்களையும் அடித்துள்ளார்.
இப்போதைக்கு, ஐபிஎல் போட்டிகளில் அதிகமுறை அரைசதம் கடந்தோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (60) முதலிடத்தில் இருக்கிறார். இன்னோர் இந்திய வீரரான ஷிகர் தவான் (49) மூன்றாமிடத்தில் உள்ளார்.