ஜகார்த்தா: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் பணிபுரியும் இந்தோனீசியாவைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவருக்கு இவ்வாண்டுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின்(ஐநா) சிறந்த பெண் காவல்துறை அதிகாரி விருது வழங்கப்பட்டது.
27 வயதான ரெனிடா ரிஸ்மயந்திக்கு இந்த விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது என ஐநா தலைமைச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெசின் தலைமைப் பேச்சாளர் கூறினார்.
குற்றங்கள் நடக்கும் இடங்களைப் பகுப்பாய்வு செய்து கண்டறிய ஐநா காவல்துறைக்கு உதவும் வகையில் குற்றவியல் தகவல் தொகுப்புகளை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த விருது தரப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் மக்கள் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைச் சிறப்பாக திட்டமிட இந்தத் தகவல் தொகுப்பு உதவியதாக அவர் தெரிவித்தார்.
இளவயதில் இந்த விருதைப் பெற்ற முதல் பெண் அதிகாரி ரிஸ்மயந்தி ஆவார் எனவும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருக்கும் ஐநாவின் ‘மினுஸ்கா’ எனப்படும் பல பரிமாண ஒருங்கிணைந்த நிலைத்தன்மை குழுவில் குற்ற தகவல்தொகுப்பு அதிகாரியாக அவர் பணியாற்றுகிறார் எனவும் அப்பேச்சாளர் மேலும் கூறினார்.